ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்று ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரௌபதி முர்முவின், அரசியல் வாழ்க்கையில் மற்றொரு முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.
மயூர்பஞ்சில் உள்ள ராய்ராங்பூரில் இருந்து இரண்டு முறை பிஜேபி எம்எல்ஏவும், ஒடிசாவின் முன்னாள் அமைச்சருமான திரௌபதி முர்மு(64), அடுத்த மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக, தேசிய ஜனநாயகக் கூட்டணி நியமித்தது. இதன்மூலம், முதல் பழங்குடியின பெண்’ குடியரசுத் தலைவராவதற்கு கட்சி களம் அமைத்தது.
திரௌபதி’ மிகவும் “இரக்கமுள்ள, சமநிலையான” ஒரு நிர்வாகி என்று ஜார்க்கண்டில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அவரை விவரிக்கின்றனர், அவர் எளிதில் அணுகக்கூடியவர், பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்.
அரசாங்கத்திற்கு “சரியான வழிகாட்டுதல்களை” வழங்கும்போது பழங்குடியினரிடையே உள்ள அச்சத்தைப் போக்குவதில், அவர் முக்கியப் பங்காற்றிய இரண்டு முக்கிய தருணங்களை அதிகாரிகள் நினைவு கூர்ந்தனர்.
திரௌபதி முர்மு யார்?
பழங்குடியினர் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ரத்தன் டிர்கி கூறியதாவது:
நான் உறுப்பினராக இருந்தபோது, பதல்கடி இயக்கம் மற்றும் குத்தகை சட்டங்களை மாற்றியமைக்கும் முயற்சி பழங்குடியினர் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. எனவே பழங்குடியினத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அரசாங்கம் மீது நம்பிக்கை ஏற்படுத்தவும் நாங்கள் ஆளுநரை அணுகினோம். அவர் சேதத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்துடன் பேசினார்.
முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் ராஜ்பவனுக்கு அடிக்கடி வந்த ஜார்கண்ட் மாநில பாஜக ஊடக இணைப் பொறுப்பாளர் அசோக் பராய்க் கூறியதாவது: பழங்குடியினர்’ ஆளுநரை எளிதில் சந்திப்பது இதுவே முதல் முறை. நாட்டில் உள்ள பழங்குடியின சமூகத்தை மேம்படுத்த அவர் நிச்சயம் பாடுபடுவார்.
சந்தால் சமூகத்தைச் சேர்ந்த முர்மு, 1997 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்தில் கவுன்சிலராக பணியாற்றி ஒடிசா அரசியலில் நுழைந்தார். மாநிலத்தில் பாஜகவின் பட்டியல் பழங்குடியினர் மோர்ச்சாவின் தலைவராக இருந்தார்.
2000 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிஜேபி-பிஜேடி கூட்டணி அரசாங்கத்தின் போது, அவர் வணிகம் மற்றும் போக்குவரத்து மற்றும், அதன்பின், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை பதவிகளை வகித்தார்.
2015 இல், அவர் ஜார்கண்ட் ஆளுநராகப் பதவியேற்றார், 2021 வரை பதவியில் இருந்தார்.
இருப்பினும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை வலிகள் நிறைந்ததாக இருந்தது. திரெளபதி’ தனது கணவர் ஷியாம் சரண் முர்மு மற்றும் இரண்டு மகன்களை இழந்தார். இவருக்கு திருமணமான ஒரு மகள் உள்ளார்.
முர்மு’ பிஏ பட்டம் பெற்றவர், ஒடிசா அரசாங்கத்தில் நீர்ப்பாசனம் மற்றும் மின்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியுள்ளார். ராய்ரங்பூரில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
(With agencies)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“