ED sought Vadra’s custodial interrogation: தொழிலதிபர் ராபர்ட் வத்ராவை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வத்ரா, லண்டனில் 1.9 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்து வாங்கியதில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
அந்நிய செலாவணி விதிகளை மீறுவது முதல் கறுப்புப் பணம் வரையிலான குற்றங்களுக்காகவும், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் லஞ்சம் அளிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டில் இந்தியாவில் தேடப்படும் ஆயுத வியாபாரி சஞ்ஜய் பண்டாரி தொடர்பான வழக்கு விசாரணையில் இவருடைய பங்கு அதிக அளவில் உள்ளதாக கூரி பண மோசடி தடுப்பு சட்ட விதிகளின் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் ராபர்ட் வத்ராவுக்கு வழங்கிய முன் ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது. அமலாக்கத்துறை விசாரணை முகமை இந்த வழக்கில் ராபர்ட் வத்ரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பண விவகாரத்தில் அவர் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் நீதிபதி சந்திரசேகரிடம் வேண்டினார்.
அமலாக்கத்துறையின் இந்த கூற்றை மறுத்த ராபர்ட் வத்ராவின் வழக்கறிஞர், அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ளவில்லை என்பது அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அர்த்தமல்ல. தனது கட்சிக்காரர் விசாரணை முகமை அழைக்கும்போதெல்லாம் ஏஜென்சி முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் அவர் ஒத்துழைக்காததற்கு ஒரு நிகழ்வுகூட இல்லை என்றும் வழக்கு தொடர்பான எல்லா ஆவணத்தையும் ஏஜென்சி அவரிடமிருந்து ஏற்கனவே கைப்பற்றியுள்ளதால், அவர் எந்த ஆதாரத்தையும் சேதப்படுத்தும் அபாயம் இல்லை என்றும் கூறி அமலாக்கத்துறையின் வாதத்தை எதிர்த்தார். அதோடு, அமலாக்கத்துறை வழக்குக்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்தி காலத்தை கழிக்கிறது என்றும் வத்ரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதரமாக எந்த ஆவணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், இந்த வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.