கோவா மற்றும் உத்தரபிரதேசத்தின் 55 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது, உத்தரகாண்டில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
முதல்வர்கள் பிரமோத் சாவந்த், புஷ்கர் சிங் தாமி, முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசம் கான் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பிற எதிர்க்கட்சிகளால் பிரச்சாரத்தின் போது குறிவைக்கப்பட்ட, ஆளும் பிஜேபிக்கு இது அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும்.
81 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட உத்தரகாண்டில் 70 தொகுதிகளில் 152 சுயேச்சைகள் உட்பட 632 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேநேரம், 11 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட கடலோர மாநிலமான கோவாவில் 40 சட்டமன்றத் தொகுதிகளில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கைரானா தொகுதியில் அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இன்று’ சஹாரன்பூர், பிஜ்னோர், மொராதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, புடான், பரேலி மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மொத்தம் 586 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“நகினா, தாம்பூர், பிஜ்னோர், அஸ்மோலி, சம்பல், தியோபந்த், ராம்பூர் மணிஹரன் மற்றும் கங்கோஹ் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகள் ‘சென்சிட்டிவ்’ பிரிவில் வைக்கப்பட்டுள்ளன” என்று உ.பி காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே’ முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி., மக்கள், பா.ஜ., ஆட்சியை தக்க வைக்க உதவுவார்கள் என்ற நம்பிக்கையில், “பிரதமரின் தலைமையிலும், மக்களின் ஆசீர்வாதத்துடனும், உ.பி.யில் இரட்டை எஞ்சின் அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறினார்.
இரண்டாம் கட்ட தேர்தல் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி, ”உத்தரகாண்ட், கோவா மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் இன்று’ வாக்களிக்க தகுதியுடைய அனைவரையும் சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்கவும், ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்தவும் நான் அழைப்பு விடுக்கிறேன்," என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“