கடந்த ஆண்டு தேர்தல் பத்திரங்களை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இது குறித்த முந்தைய நிதியாண்டின் தேர்தல் ஆணையை அறிக்கையின் மூலம் இவை கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் வாரியத் திட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்று கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி தீர்ப்பளித்து, இதற்கான பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Trust route booms after electoral bond ban: Corporate donors rush to donate via electoral trusts
அதிகபட்ச பங்களிப்பை பெற்ற ப்ரூடென்ட் எலெக்டோரல் அறக்கட்டளைக்கு நான்கில் மூன்று பங்கு நன்கொடைகள், பிப்ரவரி 15 அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு வழங்கப்பட்டன. அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ. 1,075.7 கோடியில், நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ரூ.797.1 கோடி பெறப்பட்டது.
ப்ரூடென்ட் எலெக்டோரல் அறக்கட்டளையின் பங்களிப்பும் முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ. 363.16 கோடியுடன் ஒப்பிடுகையில் ரூ.1075.7 கோடியாக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டின் கணக்குப்படி அறக்கட்டளைக்கு, ஆர்சிலர் மிட்டல் நிப்பான் (ரூ. 100 கோடி), டி.எல்.எஃப் (ரூ. 99.5 கோடி), மாதா ப்ராஜெக்ட்ஸ் (ரூ. 75 கோடி), மாருதி சுஸுகி (ரூ. 60 கோடி), மற்றும் சி.இ.எஸ்.சி ஆகியோர் நன்கொடை வழங்கியுள்ளனர். அறக்கட்டளை மூலம் அதிக நன்கொடையாக பா.ஜ.க-விற்கு ரூ.723.8 கோடி சென்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் ரூ.156.35 கோடியும், பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) ரூ.85 கோடியும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரூ.72.5 கோடியும் பெற்றுள்ளன.
மேலும், ரூ.132.5 கோடி மதிப்புள்ள நன்கொடைகள் ட்ரையம்ப் எலெக்டோரல் டிரஸ்ட் மூலம் வந்துள்ளது. அதாவது ரூ. 132.5 கோடியில், ரூ.130 கோடி பிப்ரவரி 15-க்குப் பிறகு வந்ததாக அறிக்கை கூறுகிறது. அறக்கட்டளைக்கு, சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் ரூ.50 கோடியும், சி.ஜி. பவர் இண்டஸ்ட்ரியல் ரூ.30 கோடியும், கோரமண்டல் இன்டர்நேஷனல் ரூ.25.5 கோடியும் வழங்கியுள்ளன. மொத்தத்தில் ரூ.127.5 கோடி பா.ஜ.க-வுக்கும், மீதமுள்ள ரூ.5 கோடி தி.மு.க-விற்கும் சென்றது.
ஜெயபாரத் எலெக்டோரல் டிரஸ்ட் மூலம் ரூ.9 கோடி நன்கொடை அளிக்கப்பட்டது, அதற்கு முந்தைய ஆண்டு இந்த அறக்கட்டளைக்கு எந்த விதமான நன்கொடையும் வழங்கப்படவில்லை. லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (ரூ. 8 கோடி) மற்றும் சூப்பர் சேல்ஸ் இந்தியா (ரூ. 1 கோடி) ஆகிய இரண்டு நிறுவனங்கள் நன்கொடைகளை வழங்கியுள்ளன. இரண்டு நன்கொடைகளும் செப்டம்பர் 2024 இல் பெறப்பட்டன. இதன்மூலம், பா.ஜ.க ரூ 5 கோடி, தி.மு.க ரூ 3 கோடி மற்றும் அ.தி.மு.க ரூ 1 கோடி பெற்றுள்ளன.