கடந்த ஜனவரி 1ம் தேதி புனே – கோராகாவில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்பு கலவரமாக மாறியதில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தப் பீமா-கோரேகாவ் கலவரம் வழக்கில் புனே போலீசார் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரானா ஜேக்கப் என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
மேலும் கடந்த 6ம் தேதி புனே போலீசார் 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரில், தலித் உரிமை ஆர்வலர், பேராசிரியை மற்றும் முன்னாள் பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டு நிறுவன அதிகாரியாகப் பணிபுரிந்தவரும் அடக்கம். இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளனர் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர். குறிப்பாகப் பொதுநல வாழ்க்கையையும், அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இவர்கள் செயல்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த 5 பேரின் கைதிற்கு பிறகு போலீசார் இ-மெயில்களை பரிசோதனை செய்ததில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை போலவே மற்றொரு கொலையை நிகழ்த்தத் திட்டம் தீட்டியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த இ-மெயில் கடிதம், தடை செய்யப்பட்ட மத்திய மாவோயிஸ்ட் குழுவைச் சார்ந்த ஒருவரிடம் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ராஜிவ் காந்தியை கொலை செய்தது போலவே பிரதமர் மோடியையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, பாஜக இணையதளத்தில் தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில். "கடந்த சில நாட்களாக வழக்கமான இடங்களை தாண்டி, மாவோயிஸ்ட்களின் செயல்பாடுகள் மற்ற இடங்களில் அதிகரித்துள்ளதை நம்மால் காண முடிகிறது. இது மிகப்பெரும் ஆபத்தான விஷயமாகும். இதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து வினையாற்ற வேண்டும். அரசை மட்டுமல்ல, அரசியலமைப்பு முறையையும் தூக்கி எறிந்து வன்முறையில் ஈடுபடுவதை மாவோயிஸ்ட் நம்புகிறது. அவர்கள் கொள்கையில், எந்த அடிப்படை உரிமைகளும் இல்லை, சட்ட விதிமுறைகளும் இல்லை, பாராளுமன்றமும் இல்லை, சுதந்திர பேச்சும் இல்லை. ஆனால் அவர்களது அரசியல் அடித்தளத்தை விரிவுபடுத்த, அவர்களது அனுதாபிகள் ஜனநாயக முரண்பாடுகளை முழுமையாக பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் நான்கு வகையான மாவோயிஸ்ட்கள் உள்ளனர். முதல் நிலையினர் சித்தாந்தத்தை போதிப்பவர்கள். இரண்டாம் நிலையினர், ஆயுதம் ஏந்துபவர்கள். மூன்றாம் நிலையினர், அநீதியால் பாதிக்கப்பட்ட அப்பாவி பழங்குடி மக்கள். மாவோயிஸ்ட்களை நம்பினால் தான் தீர்வு கிடைக்கும் என தவறாக நம்பவைக்கப்பட்டவ்ர்கள். இவர்களை தான் மிகவும் சீரியஸாக கவனிக்க வேண்டும். நான்காம் நிலையினர், அரை - மாவோயிஸ்ட்கள்.
துரதிர்ஷ்டவசமாக, சில அரசியல் கட்சிகள் மாவோயிஸ்ட்களை தங்களின் கருவிகளாக பயன்படுத்திக் கொள்கின்றனர். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் வரலாறு நமக்கு ஒரு அடிப்படை உண்மையைக் கற்பிக்கிறது. புலி மீது சவாரி செய்ய வேண்டாம், நீங்கள் அதனால் முதலில் பாதிக்கப்படலாம்" என்று தனது அறிக்கையில் அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.