யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம்-கள் மூலம் பிஎஃப் (PF) பணம் எடுக்கும் வசதி விரைவில் தொடங்குவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
நிராகரிப்பு காரணமாக பல சமயங்களில் பிஎஃப் பணம் எடுப்பதில் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே தான் பணம் எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், செயல்முறையை விரைவுபடுத்தவும், யுபிஐ வழியாக பிஎஃப் பணம் எடுப்பதை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய வசதி கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ தளங்களைப் பயன்படுத்தி பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை உடனடியாக எடுக்கவும் முடியும்.
2025 ஜூன் மாதம் EPFO உறுப்பினர்களுக்கு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இந்த புதிய திட்டத்தை அமல் படுத்த வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) தற்போது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துடன் (என்.பி.சி.ஐ.) கலந்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் வரும் 2025 ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் தங்கள் மொபைல் போன் மூலம் எங்கு இருந்து வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும். இதுதவிர ஏடிஎம் கார்டுகள் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.