இமாச்சலப் பிரதேசத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளான குலு, மண்டி, லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மற்றும் சம்பா போன்ற பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் பணிகள் புதன்கிழமை காலை தொடங்கின.
இதனால், பல்வேறு சாலைகள் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டன. இஸ்ரேல், குவைத், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஹிமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயன்று 1,239 மாவட்ட சாலைகள் மற்றும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் தடை செய்யப்பட்டன. இதற்கிடையில், கசோலில் சிக்கித் தவித்த 2,000 க்கும் மேற்பட்ட நபர்கள் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டதாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.
மேலும், கசோல்-பூந்தர் சாலையில் துன்காரா நிலச்சரிவை அகற்ற குழுக்கள் அயராது உழைத்து வருவதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் 200 க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பிரஜைகள் இமாச்சல பிரதேசம் முழுவதும் சிக்கித் தவித்ததாகக் கருதப்படுகிறது எனத் தெரிவித்தன.
மேலும், அவர்களது குடும்பத்தினர் தங்கள் அன்புக்குரியவர்களை அணுக முடியவில்லை என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தை அணுகியுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் அவினி டயஸ் மற்றும் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தொடர்பு கொண்டதாக ஹிமாச்சல பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மாவட்டத்தில் சிக்கிய 95 சுற்றுலாப் பயணிகளின் பட்டியலை மண்டி போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும், ஜாரி, பிஞ்சா மற்றும் நிர்மந்த் ஆகிய இடங்களில் எங்கள் தொடர்பில் இருந்த 74 பேர் பாதுகாப்பாக உள்ளனர் என்று குலு போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து குலு காவல் துணை கண்காணிப்பாளர் ஆஷிஷ் சர்மா கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாக பல பகுதிகளில் மொபைல் சிக்னல் இல்லை. சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாததால், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் உதவி பக்கம் திறக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதற்கிடையில், குலு நகரம் மணாலி, மணிகரன் மற்றும் பஞ்சார் துணைப்பிரிவுகளில் இருந்து துண்டிக்கப்பட்டதாகவும், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் சேதமடைந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
குலு நகரில் செவ்வாய்க்கிழமை இரவு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் பல குழாய்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் நீர் விநியோகம் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை.
சேதமடைந்த சாலைகள் காரணமாக குலுவில் இருந்து கசோல் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே கசோலில் இருந்து மீட்பு பணிகள் மாற்று வழிகள் வழியாக தொடங்கின.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் குலு மற்றும் மண்டியில் முதல்வர் இருக்கிறார். துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங், நீர்வளத்துறை அமைச்சர் ஜகத் சிங் நேகி ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“