பாதுகாப்பற்ற வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுதல் ; ஒரு போலீசார் கூட பாதுகாப்புக்கு இல்லாத இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருப்பது போன்ற வீடியோக்கள், சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம், மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் சந்தோவ்லி, காஜியாபூர் உள்ளிட்ட தொகுதிகளில் கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவிற்கு பின், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பாதுகாப்பற்ற வாகனங்களில் கொண்டு செல்லப்படுவது போன்றும், பாதுகாப்பற்ற இடங்களில் அவைகள் வைக்கப்பட்டிருப்பது போன்றும் சமூகவலைதளங்களில் பல்வேறு வீடியோக்கள் பரவின.
தேர்தல் ஆணையம் விளக்கம் : இந்த வீடியோக்கள் வைரலாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது. இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை முழுவதும் சிசிடிவி வசதி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் எந்தநேரத்திலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். தேர்தல் ஆணையம் நேர்மையாக தமது பணியை செய்துவருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் உச்சபட்ச பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நாளன்று அதில் உள்ள ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளது.
உத்தரபிரதேசம் மட்டுமல்லாது, பீகார், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இதுபோன்ற வீடியோக்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.