/indian-express-tamil/media/media_files/2025/09/09/jayant-chaudhary-1-2025-09-09-21-47-07.jpg)
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையின் சுயாதீனப் பொறுப்பு மத்திய இணை அமைச்சராக உள்ள ஜெயந்த் சவுதரி
மத்திய அமைச்சர் ஒருவரின் ஆண்டு சொத்து அறிக்கையில் கிரிப்டோ கரன்சி இடம்பெற்றுள்ளது முதல் முறையாகும். திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையின் சுயாதீனப் பொறுப்பு மத்திய இணை அமைச்சராக உள்ள ஜெயந்த் சவுதரி, கிரிப்டோவில் முதலீடு செய்ததை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்றுள்ள ஆவணங்களின்படி, 2025 மார்ச் 31 நிலவரப்படி, ஜெயந்த் சவுதரி தனது சொத்து அறிக்கையில் ரூ.21,31,630 கிரிப்டோ (Virtual Digital Assets) முதலீடாகப் பதிவு செய்துள்ளார். அவரது மனைவி சாரு சிங், ரூ.22,41,951 மதிப்புள்ள கிரிப்டோ சொத்துகளை அறிவித்துள்ளார். இருவரும் “தனிப்பட்ட சேமிப்பு” மூலமே இந்த முதலீடு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால் எந்த கிரிப்டோவில் முதலீடு செய்தனர் என்பதை குறிப்படவில்லை.
2024 ஜூன் மாதத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சவுதரி ரூ.17.9 லட்சம், அவரது மனைவி ரூ.19 லட்சம் கிரிப்டோ முதலீடாகக் குறிப்பிட்டிருந்தனர். அதன்பின், இருவரது முதலீடும் முறையே 19% மற்றும் 18% அதிகரித்துள்ளது.
ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்.எல்.டி) தேசியத் தலைவர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினரான சவுதரி, 2024 ஜூனில் மோடி அமைச்சரவையில் இணைந்தார். கல்வி அமைச்சகத்திலும் துணை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். நிலம், வீடுகள், பங்குகள், தங்கம், வாகனங்கள், நகைகள் போன்ற வழக்கமான சொத்துகளுக்கு மாறாக, கிரிப்டோ முதலீட்டை வெளிப்படுத்தியுள்ளதால், இந்த அறிக்கை தனித்தன்மை பெறுகிறது.
“இது பழைய முதலீடுகள். என் முழு சொத்து தொகுப்பில் 2-3 சதவீதம் மட்டுமே அப்போது அதிக அபாயம் உள்ள முதலீடாக சேர்க்கப்பட்டது. நான் கலைத் துறையில் மிகப்பெரிய முதலீடு செய்துள்ளேன்; அதற்குள் இது ஒன்றாக உள்ளது,” என சவுதரி விளக்கம் அளித்துள்ளார்.
2025 மார்ச் 31 நிலவரப்படி, ஜெயந்த் சவுதரி அசையா சொத்துகள் ரூ.33.23 கோடி (சந்தை மதிப்பு), அசையும் சொத்துகள் ரூ.14.51 கோடி என அறிவித்துள்ளார். அவரது மனைவி சாரு சிங் அசையா சொத்துகள் ரூ.2.15 கோடி, அசையும் சொத்துக்கள் ரூ.9.54 கோடி என அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கிரிப்டோ சொத்துகள் இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரிப்டோ முதலீட்டில் உள்ள நிதி, சட்ட, பாதுகாப்பு அபாயங்களை தொடர்ந்து எச்சரித்துவருகிறது. உலகளாவிய ஒருமித்த கருத்து தேவையென மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
2025 ஜூலை 28-ம் தேதி மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் நிதித்துறை துணை அமைச்சர் பங்கஜ் சவுதரி, “இந்தியாவில் கிரிப்டோ சொத்துகள் ஒழுங்குபடுத்தப்படவில்லை. இதுகுறித்த தகவல்களை அரசு சேகரிப்பதில்லை” எனத் தெரிவித்தார்.
கிரிப்டோ சொத்துகளிலிருந்து வரும் வருமானம் வருமானவரி சட்டத்தின் கீழ் வரிவசூலிக்கப்படுகிறது.
நிறுவனங்கள் தங்களது நிதி அறிக்கைகளில் கிரிப்டோ முதலீடுகளைத் தெரிவிக்க வேண்டும்.
2023 மார்ச் மாதத்திலிருந்து, கிரிப்டோ பரிவர்த்தனைகள் பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
“கிரிப்டோ சொத்துகளின் அபாயங்களைப் பற்றி பயனாளர்கள், வைத்திருப்பவர்கள், வர்த்தகம் செய்பவர்கள் அனைவரும் எச்சரிக்கப்பட வேண்டும் என்று ஆர்.பி.ஐ அறிவுறுத்தியுள்ளது. மேலும், கே.ஒய்.சி (KYC), ஏ.எம்.எல் (AML), சி.எஃப்.டி (CFT) விதிமுறைகளுக்கு ஏற்ப, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தேவையான பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.