/indian-express-tamil/media/media_files/2025/07/22/jaishankar-2025-07-22-17-22-59.jpg)
ஜெய்சங்கரின் பன்மொழித் திறமை: ராஜதந்திரமும் தனிப்பட்ட வாழ்வும் இணையும் மொழிப் பயணம்!
மொழியின் மீது ஆளுமை கொண்ட அரசியல் தலைவர்கள் என்றதும், சசி தரூர் போன்றோர் நினைவுக்கு வருவர். ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் சற்றும் சளைத்தவர் அல்ல. அனுபவமிக்க ராஜதந்திரி மட்டுமல்லாது, அவர் பல மொழிகளை கையாண்டு அசத்துபவர். அவரது ராஜதந்திரப் பணிகளும், தனிப்பட்ட வாழ்க்கையும் இணைந்து சுவாரசியமான மொழிப் பயணத்தை அவருக்குள் உருவாக்கியுள்ளன.
மொழிகளுடன் வெளிப்படையான உரையாடல்:
சமீபத்தில் நேர்காணலில், தனக்குத் தெரிந்த மொழிகள் குறித்து ஜெய்சங்கர் பேசினார். "நான் ஆங்கிலம் பேசுவேன் என்பது எல்லோருக்கும் தெரியும்" என்று சிரிப்புடன் குறிப்பிட்டார். ஆனால், மற்ற மொழிகளுடனான தனது தொடர்பு குறித்து அவர் பேசியபோது, உரையாடல் மிகவும் தனிப்பட்டதாக மாறியது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்தி பற்றிப் பேசுகையில், "நான் இந்தி பேசுவேன்... மிக உயர்ந்த நிலையில் இல்லை என்றாலும், சாதாரணத் தெருவில் பேசப்படும் சரளத்துடன்" என்றார். பிறகு, நகைச்சுவையுடன் அது எந்த வகையான இந்தி என்பதையும் தெளிவுபடுத்தினார். அது இலக்கிய நடையில் உள்ளதோ, அல்லது பல்கலைக்கழகங்களில் பேசப்படும் இந்தியோ அல்ல. அது உண்மையில் டெல்லி இந்தி. நான் டெல்லியில் பிறந்தவன். எனவே டெல்லிவாசியின் இந்தி," என்று விளக்கினார்.
தாய்மொழி தமிழ், ஆனால்...
அவரது வேர்கள் தமிழாக இருந்தாலும், டாக்டர் ஜெய்சங்கர் முறையாகத் தமிழ் கற்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். "நான் தமிழ் பேச முடியும், ஆனால் நான் விரும்பும் அளவுக்கு சரளமாகவும், சொற்களஞ்சியத்தின் மீதான பிடிப்புடனும் அல்ல" என்று நேர்மையாகத் தெரிவித்தார். இது, இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவரது பணிவை வெளிப்படுத்தியது.
கடமையால் கற்ற ரஷ்ய மொழி, காதலால் கற்ற ஜப்பானிய மொழி!
அவரது மொழிப் பயணம் அத்தோடு நிற்கவில்லை. வெளியுறவு சேவையில் அவரது பணி ரஷ்ய மொழியை அவருக்கு அறிமுகப்படுத்தியது. "ரஷ்ய மொழி வேறுபட்டது, ஏனென்றால் நான் அதை வெளியுறவு சேவையில் படித்தேன்" என்று அவர் பகிர்ந்து கொண்டார். சில மொழிகள் பிறப்பால் அல்ல, பணி நிமித்தமாக வாழ்க்கையில் நுழைந்ததை இது சுட்டிக் காட்டியது.
அனைவரையும் சிரிக்க வைத்த தருணத்தில், தனக்கு ஓரளவு ஜப்பானிய மொழி கூட தெரியும் என்று அவர் வெளிப்படுத்தினார். "எனக்கு ஜப்பானிய மொழியில் வேலைக்கு தேவையான, ஆரம்ப நிலை அறிவு உண்டு... ஏனென்றால் நான் என் மனைவியுடன் அவ்வப்போது பேச வேண்டியிருக்கிறது," என்று சிரித்துக்கொண்டே கூறினார். டாக்டர் எஸ். ஜெய்சங்கரின் இந்த பன்மொழித் திறன், அவரது ராஜதந்திரப் பணிகளுக்கு பெரும் பலமாக அமைவதுடன், அவரது தனிப்பட்ட வாழ்வின் அழகிய பக்கங்களையும் வெளிப்படுத்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.