Advertisment

குறைந்தபட்ச ஆதரவு விலை முன்மொழிவை நிராகரித்த விவசாயிகள்; ’டில்லி சலோ’ போராட்டம் தொடரும் என அறிவிப்பு

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக நிற்கிறோம் என மத்திய அரசின் முன்மொழிவை நிராகரித்த விவசாயிகள்; புதன்கிழமை ‘டெல்லி சலோ’ போராட்டம் தொடரும் என அறிவிப்பு

author-image
WebDesk
New Update
farmer protest

பாரதிய கிசான் யூனியன் (சித்துப்பூர்) தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், அவர்கள் முன்மொழிவை விவாதித்து ஆய்வு செய்தோம், அதில் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்தோம். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - குர்மீத் சிங்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kanchan Vasdev

Advertisment

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மூன்று பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மத்திய அரசு முன்மொழிந்த ஒரு நாளுக்குப் பிறகு, போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயத் தலைவர்கள் திங்கள்கிழமை மாலை இந்த வாய்ப்பை நிராகரித்து, அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தைக் கோரி புதன்கிழமை காலை 11 மணிக்கு 'டில்லி சலோ' போராட்டத்தை மீண்டும் தொடங்குவதாகக் கூறினர்.

ஆங்கிலத்தில் படிக்க: Farmer leaders reject Centre’s MSP proposal, to resume ‘Dilli Chalo’ march from Wednesday

பாரதிய கிசான் யூனியன் (சித்துப்பூர்) தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தலைவர்களுக்கும் மூன்று மத்திய அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது வழங்கப்பட்ட மத்திய அரசின் முன்மொழிவு குறித்து நீண்ட நேரம் விவாதித்ததாகவும், அது விவசாயிகளுக்கு "சாதகமாக இல்லை" என்ற முடிவுக்கு வந்ததாகவும் கூறினார்.

"எல்லா 23 பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தின் எங்கள் கோரிக்கையில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்," என்று தலேவால் செய்தியாளர்களிடம் கூறினார்.

டில்லி சலோபோராட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் தெரிவித்தார். நாங்கள் டெல்லியை நோக்கி அணிவகுத்துச் செல்வோம். போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். போராட்டம் நடத்த எங்களுக்கு முழு உரிமை உண்டு. எந்த பேச்சுவார்த்தையும் தேவையில்லை. அரசாங்கம் இப்போதே முடிவுகளை எடுக்க வேண்டும். போதுமான விவாதங்கள் நடந்துள்ளன,” என்று சர்வன் சிங் பாந்தர் கூறினார், மேலும், அவர்களுக்காக ஹரியானா-பஞ்சாப் எல்லைகள் திறக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

வேளாண் தலைவர்கள் சர்வன் சிங் பாந்தர் மற்றும் ஜக்ஜித் சிங் தலேவால் ஆகியோர் பாட்டியாலாவில் செய்தியாளர்களிடம் பேசினர். (பி.டி.ஐ)

"எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் அல்லது எங்களை டெல்லி செல்ல அனுமதிக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்," என்று சர்வன் சிங் பாந்தர் கூறினார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தடுப்புகளை உடைக்க விரும்பவில்லை. ஆனால் யாரும் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை. யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க முயற்சி செய்து வருகிறோம். யாரும் உயிரை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், இந்த அரசு செவிசாய்க்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.

அரசின் நோக்கம் கேள்விக்குறியாக உள்ளது என்று சர்வன் சிங் பாந்தர் குற்றம் சாட்டினார். நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முன்மொழிவு என்று மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் எங்களிடம் கூறினர். ஆனால் அவர்கள் வெளியே வந்த பிறகு, பயறு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்திக்கு மட்டுமே விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்றும், நெல் பல்வகைப்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறத் தொடங்கினர்,” என்று ஞாயிற்றுக்கிழமை சண்டிகரில் நடந்த நான்காவது சுற்று பேச்சுவார்த்தையைக் குறிப்பிட்டு தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறினார்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் விவசாய தலைவர்களுடனான கூட்டத்தில் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர்களின் கூற்றுப்படி, பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டும் அரசாங்கத்திற்கு 1.5 லட்சம் கோடி செலவாகும் என்று தலேவால் கூறினார். 23 பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு 1.75 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று நிபுணர்களின் கணக்கீடுகள் எங்களிடம் உள்ளன. பாமாயில் இறக்குமதிக்காக ரூ.1.75 லட்சம் கோடி செலவிடுகிறோம். நாட்டில் ஏற்கனவே பல நோய்களுக்கு பாமாயில் காரணம். எண்ணெய் வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசாங்கம் அறிவித்தால், இந்த இறக்குமதியில் 1.75 லட்சம் கோடி ரூபாய் சேமிக்க முடியும்,” என்று தலேவால் கூறினார்.

நள்ளிரவுக்குப் பிறகு முடிவடைந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் இருந்து வெளிவந்த அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய அரசின் முன்மொழிவை அறிவித்தார். முன்மொழிவின்படி, NCCF மற்றும் NAFED உள்ளிட்ட அரசு கூட்டுறவு முகமைகள், மக்காச்சோளம் மற்றும் பாசி பருப்பு, உளுந்து, துவரம் பருப்பு ஆகிய மூன்று பருப்பு வகைகளை கொள்முதல் செய்யும் மற்றும் CACP ஆல் குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவு செய்த பிறகு பருத்தி விளைபொருட்களை இந்திய பருத்தி கழகம் (CCI) கொள்முதல் செய்யும். இதற்காக விவசாயிகளும், இந்த ஏஜென்சிகளும் ஐந்தாண்டுகளுக்கு சட்டப்பூர்வ ஒப்பந்தம் செய்து கொள்வார்கள் என்று அமைச்சர் கூறினார்.

நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் பஞ்சாபில் பாலைவனமாதல் அதிகரித்து வருவதை விவசாயிகள் தலைவர்கள் சுட்டிக்காட்டியதாகவும், இது பல்வகைப்படுத்தல் குறித்த விவாதத்திற்கு வழிவகுத்ததாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ”பருப்பு வகைகளை பயிரிடுவதால் இறக்குமதியை குறைப்பது, பஞ்சாபில் தண்ணீரை சேமிப்பது, மண்ணின் ஆரோக்கியம் மற்றும் விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது எப்படி என்று நாங்கள் விவாதித்தோம்,” என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

திங்களன்று, இந்த திட்டம் உண்மையில் பல்வகைப்படுத்தல் என்ற பெயரில் ஒப்பந்த விவசாயம் என்று பாந்தர் கூறினார். நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே இது பயனளிக்கும். விவசாயிகள் எந்த திட்டத்தையும் ஏற்கவில்லை என்று நாட்டு மக்கள் கூறக்கூடாது என்பதற்காக நாங்கள் விவாதிக்க நேரம் எடுத்துக் கொண்டோம். ஆனால் இது அரசின் தந்திரமான நடவடிக்கையாகும்,'' என்று பாந்தர் கூறினார்.

இது அரசாங்கத்தின் நோக்கத்தின் பிரதிபலிப்பாகும். அனைத்து பயிர்களுக்கும் அரசு முன்மொழிய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை சட்ட உத்தரவாத சட்டத்தை நாங்கள் விரும்புகிறோம். கடன் தள்ளுபடி குறித்து என்ன ஆய்வு மேற்கொண்டது என்பதை இந்திய அரசு தெரிவிக்க வேண்டும்,” என்று பாந்தர் கூறினார்.

மத்திய அமைச்சர்களுடனான விவசாயிகளின் சந்திப்பில் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் இருப்பதைக் குறிப்பிட்டு, அவர் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தலேவால் கூறினார். "அவர் முதல்வர் என்று நாங்கள் அவரிடம் சொல்ல விரும்பினோம், எங்கள் மாநிலத்தில் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் பிற வெடிமருந்துகள் வீசப்படுகின்றன. அதனால்தான் அவர் பேச்சுவார்த்தைக்கு வர விரும்பினோம். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் எடுக்கப்படவில்லை,'' என்று தலேவால் கூறினார்.

இன்று, ஹரியானா டி.ஜி.பி அவர்கள் பெல்லட் துப்பாக்கிகளை (போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது) பயன்படுத்தவில்லை என்றும் கண்ணீர் புகை குண்டுகளை கூட பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். டி.ஜி.பி செய்யவில்லை என்றால் யார் செய்தார்கள் என்பதை அவரிடம் சொல்ல விரும்புகிறோம். அந்த மக்கள் மீது ஹரியானா அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சுப்ரீம் கோர்ட்டும் தானாக முன்வந்து நோட்டீஸ் எடுக்க வேண்டும்என்று தலேவால் கூறினார்.

முந்தைய நாள், 2020-21 மறியல் மற்றும் 'டில்லி சலோ' அழைப்பின் ஒரு பகுதியாக இல்லாத சம்யுக்தா கிசான் மோர்ச்சா, மத்திய அரசின் முன்மொழிவை நிராகரித்தது, இந்த முன்மொழிவு விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கையை "திருப்பவும் நீர்த்துப்போகவும்" முயல்கிறது என்று கூறியது. சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான 'C-2 பிளஸ் 50 சதவிகிதம்' சூத்திரத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் ஏற்க மாட்டார்கள், என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment