கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த மூன்று சட்டங்களும் சட்டப்படி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரத்து செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், விவசாய சங்கங்கள் தங்களது மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனார். அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் பெறப்படும் என்றும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதனை திரும்பப் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், டெல்லி சிங்கு எல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சம்யுக்த கிஸான் மோர்ச்சா கூட்டமைப்பு, திட்டமிட்டபடி நவம்பர் 29 ஆம் தேதி விவசாய சங்கங்களின் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் 500 போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் அனுப்ப எஸ்கேஎம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், வரும் நவம்பர் 27 ஆம் தேதி விவசாயச் சங்கங்கள் நடத்தும் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்யுக்த கிஸான் மோர்ச்சா கூட்டமைப்பு பிரமதர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் முன்வைத்துள்ள 6 கோரிக்கைகள்:
- ஜூன் 2020 முதல் தற்போது வரை, டெல்லி, ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.
- குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் விளைபொருள்களை கொள்முதல் செய்வதற்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளித்திட வேண்டும்.
- மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெற வேண்டும்
- டெல்லி மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் காற்றுத்தர மேலாண்மைக்கான சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களை நீக்க வேண்டும்.
- லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணமான ஆசிஷ் மிஸ்ராவின் தந்தையும், மத்திய இணை அமைச்சருமான அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து , கைது செய்ய வேண்டும்.
- சுமார் 700 விவசாயிகள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கி மறுவாழ்வு அளிப்பது, அவர்களுக்கு நினைவிடம் எழுப்புவதற்காக சிங்கு எல்லையில் நிலம் வேண்டும்.
நீங்கள் எங்களை வீடு திரும்புமாறு வேண்டுகொள் விடுத்துள்ளீர்கள்.தெருக்களில் உட்கார்ந்துகொள்வதை நாங்கள் விரும்புவதில்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். மற்ற கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றிவிட்டால், எங்கள் குடும்பத்தை சந்திக்க புறப்படுவோம். கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 6 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளனர்.
ஜலந்தரில் போராடத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் கூறுகையில், "போராட்டத்தைத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. சட்டத்தை ரத்து செய்ய அரசு தாமதித்தால், இன்னும் ஓராண்டு வேண்டுமானாலும் இங்கேயே இருப்போம்" என கூறியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil