பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது - இனிமேல் வீட்டுக்காவல் தான்....
Farooq Abdullah : பரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரது காவல் 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நீட்டிக்கப்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் வகையிலான அரசியல் சட்டப்பிரிவு 370 பிரிவை, மத்திய அரசு சமீபத்தில் தளர்த்திக்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக, காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக செயல்பட்ட மத்திய அரசு முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்டோரை வீட்டுக்காவலில் வைத்தது. அங்கு பெருமளவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், பரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது குறித்து மத்திய அரசு வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது : இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்படி, பரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 15ம் தேதி) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரது காவல் 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது வீடு, துணை சிறையாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வீட்டிற்கு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க எந்த தடையுமில்லை என்று காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.