Finance ministry approves 8.5 percent interest : தீபாவளிக்கு முன்னதாக 2020-2021 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதமாக 8.5%-ஐ அறிவித்துள்ளது நிதி அமைச்சகம். இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பயனாளிகளின் கணக்குகளில் வட்டியை வரவு வைக்க உதவுகிறது. வெள்ளிக்கிழமை அமைச்சகத்தின் ஒப்புதலுடன், தொழிலாளர் அமைச்சகம் விகிதத்தை விரைவில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். இ.பி.எஃப்.ஓ அமைப்பு 6.7 கோடி சந்தாதாரர்கள் தளத்தையும் 6.9% லட்சம் பங்களிப்பு நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
கடன் மற்றும் பங்கு முதலீடுகள் மூலம் பெறப்பட்ட 70,300 கோடி ரூபாய் வருமானத்தில் ரூ. 300 கோடி பணம் உபரியாக உள்ளது. இந்த வருமானத்தின் அடிப்படையில் வட்டி விகிதம் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது. ஓய்வூதிய நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு (CBT) மார்ச் மாதத்தில் 2020-21 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஈக்விட்டி முதலீடுகளின் வருமானத்தை வைத்து இந்த பரிந்துரை செய்யப்பட்டது.
2021ம் நிதி ஆண்டில், இ.பி.எஃப்.ஓ, பங்கு சந்தை முதலீட்டை கலைக்க முடிவு செய்திருந்தது. கடன் மற்றும் பங்குசந்தை முதலீடு மூலம் கிடைத்த வட்டி வருமானத்தின் அடிப்படையில் இந்த வட்டி விகிதம் பரிந்துரை செய்யப்பட்டது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தை உறுதிப்படுத்தும் செயல்முறை விரைவுபடுத்தப்பட்டது.
கொரோனா தொற்று காலத்தில் அதிக அளவில் பணத்தை மக்கள் டெபாசிட்டுகளில் இருந்து எடுத்த போதும் 2019-20ல் இருந்த வட்டி விகிதத்தை 2020-21-ஆம் ஆண்டிற்கான PF வட்டி விகிதத்திலும் தக்க வைத்துக் கொண்டது இ.பி.எஃப்.ஓ. கோவிட் பெருந்தொற்றின் போது மக்கள் டெபாசிட்டுகளில் இருந்து அதிக அளவு பணத்தை எடுப்பதையும் குறைந்த அளவு பங்கீட்டை வழங்குவதையும் இ.பி.எஃப்.ஓ கண்டது. டிசம்பர் 31 வரை 56.79 லட்சம் நபர்கள் ரூ. 14,310.21 கோடி பணத்தை அட்வான்ஸ் வசதி மூலம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக, நிதி அமைச்சகம் EPFO-ஆல் தக்கவைக்கப்பட்ட அதிக வட்டி விகிதத்தை கேள்விக்குள்ளாக்கியது மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப வட்டி விகிதத்தை 8%க்கும் குறைவாக குறைக்க தூண்டியது. மற்ற அனைத்துவிதமான சேமிப்புகளைக் காட்டிலும் இந்த பி.எஃப். சேமிப்பின் வட்டி விகிதம் அதிகமாகவே உள்ளாது. சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் 4.0% முதல் 7.6% என்று உள்ளது. மேலும் ஒட்டுமொத்த சந்தை விகிதங்கள் வீழ்ச்சியடைந்தாலும், சமீபத்திய காலாண்டுகளில் வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் வைக்கப்பட்டுள்ளன.
2019-20 மற்றும் 2018-19 நிதி ஆண்டில் பி.எஃப். சேமிப்பு கணக்கிற்கு வழங்கப்பட்ட வட்டி விகிதம் குறித்தும் நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியது. IL&FS மற்றும் இது போன்ற ஆபத்தான நிறுவனங்களுக்கு இ.பி.எஃப்.ஓவின் பங்களிப்பு குறித்து கேள்வியும் எழுப்பியது. கடந்த ஆண்டு செப்டம்பரில், கோவிட்-19-ல் இருந்து எழும் விதிவிலக்கான சூழ்நிலைகளை மேற்கோள் காட்டி CBT 2019-20 நிதியாண்டிற்கான வட்டி செலுத்துதலை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க பரிந்துரைத்தது. ஆனாலும் ஜனவரி 2021 முதல் EPFO ஒரே நேரத்தில் வட்டியை வரவு வைக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil