AAI Appoints First Female Kerala Firefighter: விமான நிலைய தீயணைப்பு பணியை இதுவரை ஆண்கள் மட்டுமே செய்துவந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த ரெம்யா என்ற பெண் சென்னை விமான நிலையத்தில் தீயணைப்பு வீராங்கனையாக பணியில் சேர்ந்து தென்னிந்தியாவின் முதல் விமான நிலைய தீயணைப்பு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
விமான நிலைய தீயணைப்பு படை வீரர்கள் பணி என்பது கடினமானது. அதில் இதுவரை ஆண்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். ஆண்களுக்கு நிகராக எல்லா துறைகளிலும் பெண்கள் நுழைந்து கோலோச்சும் காலத்தில் இந்த துறையிலும் பெண்கள் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ரெம்யா என்பவர் சென்னை விமான நிலையத்தில் தீயணைப்பு படை வீராங்கனையாக பணியில் சேர்ந்து தென்னிந்தியாவின் முதல் விமான நிலைய தீயணைப்பு படை வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம், இவர் நாட்டின் மூன்றாவது விமான நிலைய தீயணைப்பு படை வீராங்கனையாகவும் ஆகியுள்ளார்.
ரெம்யா, விமான நிலைய தீயணைப்பு படை வீராங்கனையாக பணியில் சேர்வதற்கு முன்பு தீயணைப்பு பயிற்சி மையத்தில் நான்கு மாதங்கள் கடுமையான பயிற்சி பெற்றுள்ளார். அதற்குப் பிறகே பணியில் சேர்ந்துள்ளார்.
தீயணைப்பு வீராங்கனை பணியில் சேர்ந்துள்ள ரெம்யா, ஒரு சவாலான வேலையில் இப்போதுதான் சேர்ந்திருக்கிறேன். அதை நல்லமுறையில் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. வருங்காலத்தில் தீயணைப்பு படையில் நிறைய பெண்கள் சேர்வார்கள் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ரெம்யா கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றவர். விமான நிலைய தீயணைப்பு படை பணிக்கு வருவதற்கு முன்பு ரெம்யா எல்.பி.எஸ். தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக பணி செய்து வந்தார். இந்த சூழலில்தான் அவருக்கு விமான நிலைய தீயணைப்பு படையில் வேலை கிடைத்து பணியில் சேர்ந்துள்ளார்.