IAF used in Pakistan-controlled air space : இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் அமைந்திருந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத முகாம்களை இன்று காலையில் தாக்கி அழித்துள்ளது. இன்று காலை, பாகிஸ்தானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் காஃபூர் இந்தியாவின் விமானப்படை ஊடுருவலையும் தாக்குதலையும் குறித்து ட்வீட் செய்திருந்தார்.
ஏ.என்.ஐ செய்தி ஏஜென்சியின் தகவல் படி, இன்று காலை 03:30 மணி அளவில், மைரேஜ் 2000 என்ற இந்திய போர் விமானமானது எல்லைக்கு அப்பால் இருக்கும் தீவிரவாத முகாம்களில் மிகப்பெரிய மற்றும் முக்கியமான ஒன்றை தாக்கி அழித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார். 1000 கிலோ வெடிமருந்து இந்தா தாக்குதலில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், 12 மைரேஜ் 2000 ரக ஜெட் விமானங்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும் படிக்க : ராணுவத் தாக்குதல் Live Updates
இந்நிலையில் இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நரேந்திர மோடி மற்றும் இதர அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வந்தனர்.
1971ம் ஆண்டிற்கு பிறகு இப்படி ஒரு தாக்குதல்
இந்திய அரசோ அல்லது இந்திய விமானப்படையோ இந்த தாக்குதலுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத், ராகுல் காந்தி, மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தாக்குதல் தொடர்பாக ட்வீடில் கருத்து தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. 1971ம் ஆண்டிற்கு பிறகு இந்திய விமானப்படை பாகிஸ்தானில் தாக்குதலை நடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். 1999 ஆண்டு கார்கில் போரின் போது, வாஜ்பாய் அரசு, நம் நாட்டிற்கு சொந்தமான லைன் ஆஃப் கண்ட்ரோல் பகுதியில் இது போன்ற தாக்குதல் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஜெய்சல்மர் பகுதியில் இந்த மாதத்தின் துவக்கத்தில் நடத்தப்பட்ட வாயூ சக்தி பயிற்சியின் போது, இரவு மற்றும் பகல் பொழுதில் இலக்கினை தாக்கி அழிக்கும் விமானங்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதம் 14ம் தேதி, ஜெய்ஷ் - இ - முகமது என்ற அமைப்பு, துணை ராணுவ படையினர் மீது தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.