கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழாவில் அசைவ உணவு வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
கேரள பள்ளிகள் மத்தியில் நடைபெறும் கலை விழா,கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகள் நடத்தப்படவில்லை . இந்நிலையில் தற்போது நடைபெற்று வருகிறது. 10,000 மேற்பட்ட மாணவ, மாணவியர், 239 மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கலை விழாவில் வழங்கப்படும் உணவு எல்லாம் சைவமாக இருப்பதாகவும். பார்ப்பன கருத்தோட்டம் நிறைந்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் கிட்டதட்ட 16 ஆண்டுகளாக இந்த கலை விழாவில் சமையல் ஒப்பந்ததாரராக மோகன் நம்பூதிரிதான் செயல்பட்டு வருகிறார். இவர் பார்ப்பன சாதியை சேர்ந்ததால் , அவர் அசைவ உணவுகளை சமைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சமூவலைதளத்தில் கேரள அரசின் நிலைபாட்டை விமர்சித்து பல பதிவுகள் பதிவு செய்யப்பட்டன. எதிர்கட்சியான பாஜகவும் கேரள அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்தது. கேரள கல்வித்துறை அமைச்சர் மற்றும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவருமான சிவன் குட்டி கூறுகையில்” அடுத்த ஆண்டு முதல் அசைவ உணவும் விழாவில் இடம் பெறும். ஆரோக்கியமான கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அரசியல் செய்ய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக சமையல் ஒப்பந்ததாரர் மோகன் நம்பூதிரி கூறுகையில்” அசைவ உணவு சமைக்க வேண்டும் என்று கல்விதுறை கேட்டால் நான் சமைத்து தருகிறேன். நான் அசைவ உணவை சமைக்கமாட்டேன். அதற்காக தனி ஒரு குழு இருக்கிறது. மேலும் தனி பாத்திரங்களும் வைத்திருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.