பாஜகவின் தென்னக நுழைவு வாயிலான கர்நாடகத்தை தக்க வைக்க அக்கட்சி கடுமையான போருக்கு தயாராகிவருகிறது. இந்த நிலையில் அம்மாநில தேர்தல் பொறுப்பாளர் ஆக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை (பிப்.4) அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவால் நியமிக்கப்பட்டார்.
துணை பொறுப்பாளர் ஆக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதில் முக்கியப் பங்காற்றிய பிரதான், முன்னதாக பீகாரில் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராகவும், கர்நாடகா மற்றும் உத்தரகாண்டில் கட்சி விவகாரப் பொறுப்பாளராகவும் இருந்தார்.
அவர் மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராமிற்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்தார், அங்கு டிஎம்சி தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, மாநில சட்டமன்றத்தில் தனது கட்சியை மகத்தான வெற்றிக்கு வழிநடத்திய போதிலும் தோல்வியடைந்தார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நம்பிக்கைக்குரிய பிரதான், “சிறந்த வேட்பாளர் தேர்வு, சுமூக நிலைப்பாடு, உள்கட்சி பிரச்னைகளை தவிர்த்தல் உள்ளிட்டவற்றில் தீவிர கவனம் செலுத்துபவர் ஆவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்குளை பெறுவதிலும் பிரதான் முன்னிலை வகிப்பவர் ஆவார்.
அந்த வகையில் மாண்டவியாவும் கட்சியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் எனக் கூறப்படுகிறது. இவர் குஜராத்தில் பாஜகவின் அபரிதமான வெற்றிக்கு துணை நின்றார்.
அதேபோல்தான் அண்ணாமலை. தமிழ்நாட்டில் பாஜக கட்சியை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்கு வகிப்பவராக உள்ளார். இது குறித்து பாஜக மூத்தத் தலைவர் ஒருவர் கூறுகையில், “இளைஞர்கள் மத்தியில் பாஜக கட்சியை எடுத்துச் சென்றதில் அண்ணாமலை முக்கிய பங்கு வகிக்கிறார். அனைத்து தரப்பு மக்களின் குரலாக ஒலிக்கிறார். கட்சியைப் பலப்படுத்தி அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து வருகிறார்” என்றார்.
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை கர்நாடக தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். தென்னகத்தின் பாஜக நுழைவு வாயில் கர்நாடகம் என்பதால் அங்கு கட்சியை வெற்றி பெற செய்வதில் அண்ணாமலை முக்கிய பங்கு வகிப்பார் என்று நம்பப்படுகிறது.
மேலும் அண்ணாமலை சமூக ஊடகங்கள் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியை நன்கு கவனிப்பவராக உள்ளார்.
மேலும், இதுவரை கர்நாடகாவில் லிங்காயத் வாக்குகளை பெரிதும் நம்பியிருந்த பாஜக, வொக்கலிகாக்கள் ஆதிக்கம் செலுத்தும் பழைய மைசூரு பகுதியில் கவனம் செலுத்தும் திட்டங்களை வகுத்துள்ளது.
89 எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு அனுப்பும் இந்த பிராந்தியத்தில் தனது நிலையை மேம்படுத்துவதற்காக வலுவான மற்றும் பிரபலமான வொக்கலிகா தலைவர்களை கட்சி அணுகி வருகிறது.
2008-ல் உச்சகட்டமாக, பழைய மைசூருவில் உள்ள 11 மாவட்டங்களில் பாஜக 28 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பெங்களூரு பகுதியில் மட்டும் 17 பேர் ஆவார்கள்.
மேலும், 2018ல் இந்த 89 இடங்களில் 22 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற முடிந்தது.
மேலும் இந்தப் பகுதிகளில் செல்வாக்கு கொண்ட மதசார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் காங்கிரஸின் வாக்கு வங்கியான இஸ்லாமிய வாக்குகளை அக்கட்சி பிரிக்கக் கூடும்.
ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால், மதசார்பற்ற ஜனதா தளம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு பாலமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/