கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் இன்று வெள்ளிக்கிழமை பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84. கஸ்தூரிரங்கன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், அன்றிலிருந்து அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்த நிலையில், இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Former Isro chief K Kasturirangan passes away at 84
கஸ்தூரிரங்கன் 1994 முதல் 2003 வரை இஸ்ரோவுக்கு தலைமை தாங்கினார். இது இந்திய விண்வெளி நிறுவனத்திற்கு முக்கிய காலகட்டமாகும். ஏனெனில், அன்றைய காலக்கட்டத்தில் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை (ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்) அணுகுவது உட்பட பல சர்வதேச கட்டுப்பாடுகளை இஸ்ரோ எதிர்கொண்டது. 1998 இல் இந்தியாவின் அணுசக்தி சோதனைக்குப் பிறகு கட்டுப்பாடுகள் இன்னும் இறுக்கப்பட்டன.
கஸ்தூரிரங்கனின் தலைமையின் போதுதான் இஸ்ரோ தன்னம்பிக்கை பாதையில் இறங்கி சந்திரயான் போன்ற பெரிய பயணங்களுக்குத் திட்டமிடத் தொடங்கியது. பின்னர் அவர் மாநிலங்களவை உறுப்பினரானார். அத்துடன் பல ஆலோசனைப் பதவிகளில் அரசாங்கத்திற்குப் பணியாற்றினார்.
கஸ்தூரிரங்கன் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் பல குழுக்களுக்குத் தலைமை தாங்கினார். அவரின் தலைமையில் உருவாக்கப்பட்ட வரைவுக் குழுவின் பரிந்துரைகளின் படியே புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டது
மேலும், அவற்றில் ஒரு பகுதியாக இருந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் குழு விரிவான அறிக்கை சமர்ப்பித்தது. அவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.