/indian-express-tamil/media/media_files/2024/12/23/JreCdMos4edS4h7ryiN5.jpg)
சத்தீஸ்கர் மாநிலத்தில், நடிகை சன்னி லியோன் பெயரை பயன்படுத்தி போலியாக கணக்கு தொடங்கி, அரசிடமிருந்து மாதந்தோறும் ரூ. 1000 பெற்று மோசடி செய்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Fraudster opens online account in Sunny Leone’s name, gets Rs 1,000 monthly under govt scheme
சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ.க அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு, மஹாதாரி வந்தன் யோஜனா என்ற திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தொடர்பான இணையதளத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்வையிட்டது. இதில் பயனாளிகளின் விவரங்களை சரிபார்த்ததில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை சன்னி லியோன் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி இந்த திட்டத்தின் மூலம் கடந்த மார்ச் முதல் டிசம்பர் வரை மாதந்தோறும் ரூ. 1000 பெறப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் பட்டியலில் சன்னி லியோனின் கணவர் பெயர் ஜானி சின்ஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பஸ்டர் மாவட்டத்தின், தாளுர் பிரிவில் உள்ள அங்கன்வாடி பகுதியில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஹரிஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. "இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்திடமிருந்து புகார் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி, மாநிலத்தில் உள்ள 70 லட்சம் திருமணமான பெண்களுக்கு இத்திட்டத்தின் பத்தாவது தவணையாக மொத்தம் ரூ. 652.04 கோடியை அரசு வழங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 70 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 5,000 கோடி அனுப்பப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.