G-20 summit : PM Narendra Modi, Donald Trump talk : இன்று ஜப்பானில் உள்ள ஒசாக்கா பகுதியில் நடைபெறுகிறது ஜி-20 உச்சி மாநாடு. அதன் தொடக்க நாளான இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினை சந்தித்து பேசியுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
இரு நாட்டுக் கொள்கைகள், 5ஜி தொழில்நுட்பம், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி, பாதுகாப்புத் துறை தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. மேலும் இந்தியாவின் மீது அமெரிக்கா காட்டும் அன்பிற்கு நன்றிகள் என்றும் மோடி அறிவித்துள்ளார்.
G-20 summit : PM Narendra Modi, Donald Trump talk : மோடி ட்வீட்
மோடி இரண்டாம் முறையாக பிரதமர் ஆன பிறகு அமெரிக்க அதிபரை முதல் முறையாக சந்திக்கார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபருடன் விவாதிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்து ட்வீட் செய்துள்ளார். கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் சார்பான பல்வேறு முக்கிய முடிவுகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அதில் தொழில்நுட்பம், பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவ மேம்பாடு, பொருளாதார, வர்த்தக வளர்ச்சி குறித்து பேசியதாகவும் அறிவித்துள்ளார் மோடி.
இந்த சந்திப்பு குறித்து டொனால்ட் ட்ரெம்ப் அறிவிக்கும் போது, இன்றைய நாள் முழுவதும் நாங்கள் வர்த்தகம் தொடர்பான ஆலோசனையை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டார். மேலும் ”நானும் மோடியும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்” என்றும் மேற்கோள் காட்டினார். வர்த்தகத்தோடு ராணுவம் தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற மோடிக்கு டொனால்ட் ட்ரெம்ப் வாழ்த்துகளைக் கூறினார். மேலும் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியானது மிகவும் அதிகமானது. அதனை குறைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் டொனால்ட் ட்ரெம்ப் அறிவித்துள்ளது.