மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர். இந்த பயங்கர தாக்குதலில் 15 வீரர்கள் உடல்சிதறி பலியானார்கள். 20 பேர் காயமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில் பல பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், மகாராஷ்டிராவில் கட்சிரோலி பகுதியில் இன்று மதியம் கமாண்டோ படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து மாவோயிஸ்டுகள், குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர். இதில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவரும் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது.
இத்தாக்குதல் குறித்து கட்சிரோலி சரக டிஐஜி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், "QRT எனப்படும் நமது 'குயிக் ரெஸ்பான்ஸ் டீம்' குர்கெடா காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டனர். புரடா கிராமத்திற்கு தனியார் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். மதியம் 12:30 மணியளவில் நுல்லா அருகேயுள்ள லென்டாரி பகுதியில் வாகனம் சென்றுக் கொண்டிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், நமது 15 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்" என்றார்.
தாக்குதலுக்கு பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.