Galwan clash China : கடந்த ஆண்டு இந்திய-சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 5 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி இரு நாடுகளின் படைகளும் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையாக மோதிக்கொண்டன. இதில், இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதே நேரம் சீனா தரப்பில் 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், உயிரிழப்பு ஏற்பட்டதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை.
கல்வான் மோதலில் 45 சீன வீரர்கள் இறந்திருப்பதாக ரஷியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.ஆனால், சீன வீரர்களின் எண்ணிக்கையை சீனா தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 5 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘பீப்புள்ஸ் டெய்லி’யில் தகவல் வெளியாகி இருக்கின்றது.சீன ராணுவத்தின் சின்ஜியாங் படைப்பிரிவு கமாண்டர் குய் ஃபபாவோ மற்றும் சென் ஹாங்ஜன், சென் சியாங்ராங், சியாவோ சியுவான் மற்றும் வாங் ஜுயோரன் ஆகியோர் உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு சீன மத்திய ராணுவ ஆணையம் மரியாதை செலுத்தி கவுரவித்ததாகவும், உயிரிழந்த 5 சீன வீரர்களுக்கும் சீனா விருது அறிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் அத்துமீறிய போது, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், 43-க்கும் அதிகமான சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.