குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 45 இந்தியர்கள் பலியான சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதற்கட்ட விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த குறைபாடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு வேலைக்காக இந்தியர்கள் அதிகம் செல்லும், நாடுகளில் ஒன்றான குவைத் நகரின் தெற்கே உள்ள மங்காப்பில் 196 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று முன்தினம் (ஜூன்12) திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 49 பேர் உயிரிழந்த நிலையில், இதில் 45 பேர் இந்தியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க : Gas cylinders, cardboard partitions, door to roof locked: Kuwait probe into building fire
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பில், இருந்த பல்வேறு குறைபாடுகள் குறித்து தெரியவந்துள்ளது. ஏழு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் சுமார் இரண்டு டஜன் எரிவாயு சிலிண்டர்கள், காகிதம், அட்டை மற்றும் பிளாஸ்டிக் போன்ற எரியக்கூடிய பொருட்கள், நெரிசலான அறையில் இருந்த தொழிவாளர்கள், அறைகள், கட்டிடத்தின் மேற்கூரையின் கதவுகள் பூட்டப்பட்டதால், தொழிலாளர்கள் மேல்மாடிக்கு தப்பிச்செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆதாரங்கள் தெரிவித்துள்ளது. தீ விபத்து குறித்து குவைத் புலனாய்வாளர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தீவிபத்தில் உயிரிழந்த 49 பேரில் 45 பேர் இந்தியர்கள்
குவைத் நாட்டின் அதிகாரிகளின் கூற்றுப்படி, இறந்த 49 பேரில் 45 பேர் இந்தியர்கள் மற்றும் மூன்று பேர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்பட உள்ளது. மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், குவைத்துக்கான இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உயிர் பிழைத்த சிலரையும், குவைத் அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகளையும் சந்தித்தார்.
தீவிபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில். கிச்சன் தரை தளத்தில் அமைந்திருந்த இரண்டு டஜன் கேஸ் சிலிண்டர்களால் மோசமாகி, தரைத்தளத்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கட்டிடத்தின் ஒவ்வொரு அறையிலும் ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் தங்கியிருந்துள்ளனர். நெரிசலான இந்த அறைகளில், அட்டைகள், காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற எரியக்கூடிய பொருட்கள் இருப்பதால், தீ வேகமாகப் பரவியதாகக் கூறப்படுகிறது.
தீ மளமளவென பரவியதால், கட்டிடத்தின் கீழ் தளம் மற்றும் மேல் தளங்களில் உள்ள அறைகளில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. மேல் மாடியில் இருந்தவர்கள் மொட்டை மாடிக்கு செல்ல முயன்றனர், ஆனால் மொட்டைமாடியின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் தொழிலாளர்கள் தீக்குள் சிக்கும் நிலை உருவானது. இப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிக இடவசதிக்காக உள்நாட்டில் மாற்றப்பட்டுள்ளதாகவும், குவைத்தில் கட்டிட விதிகளை மீறுவதாகவும் இதனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு இடையூறாக இருந்தது என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பெரிய தீவிபத்து ஏற்பட காரணமாக இருந்த சூழ்நிலைகள், கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தூண்டியது. இது குறித்து குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல்-யஹ்யா இந்த துயர சம்பவத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மருத்துவ பராமரிப்பு, உடல்களை திருப்பி அனுப்புதல் மற்றும் சம்பவம் பற்றிய விசாரணை உட்பட முழு ஆதரவையும் அளிப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார் என்று இந்தியள தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் காயமடைந்த இந்தியர்களில் சிலரை மருத்துவமனைகளில் சந்தித்து அவர்களுக்கு இந்திய அரசின் அனைத்து ஆதரவையும் தருவதாக உறுதியளித்தார். குவைத் அதிகாரிகள் உடல்களில் டிஎன்ஏ சோதனைகளை நடத்தி வருகின்றனர், மேலும் அவர்களின் சடலங்களை இந்தியா கொண்டுவர ஐஏஎஃப் விமானம் தயார் நிலையில் உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையெ குவைத்தின் எமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான உத்தரவுகளை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்தியர்களின் உடல்களை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல விமானம் தயார் செய்ய உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவைத் நாட்டின் துணைப் பிரதமர், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் ஃபஹத் அல்-யூசப் அல்-சபா, கட்டிடத்தின் குவைத் நில உரிமையாளர் மற்றும் கட்டிடத்தின் எகிப்திய காவலாளி உள்ளிட்ட பலரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அவரது அனுமதியின்றி அவர்களை விடுவிக்க வேண்டாம் என்று அதிகாரிகளை எச்சரித்தார்.
தீ விபத்து ஒரு பேரழிவு என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன, மேலும் நகராட்சியின் குழுக்கள் அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்யும் என்றும், எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் விதி மீறல்களை செய்துள்ள கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ள குவைத் அரசாங்கம், கட்டிடங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களின் நெரிசல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“