கோவாவில் நேற்று அதிகாலை நடைபெற்ற கோயில் வருடாந்திர திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
பிச்சோலிம் பகுதியில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோயிலில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கிய வருடாந்ந்திர ஜாத்திரைக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தபோது, அதிகாலை 3 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. காயமடைந்தவர்களில் குறைந்தது 10 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், கோவா மருத்துவக் கல்லூரியில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெயர் வெளியிட விரும்பாத மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பவத்தின் சூழ்நிலை இன்னும் தெளிவாக இல்லை, ஆனால் கோயிலுக்குச் செல்லும் சாலையின் அருகே உள்ள ஒரு செங்குத்தான சரிவில் ஒருவர் தவறி விழுந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. குறுகிய பாதையில் திரண்டிருந்த பக்தர்கள், நெரிசலில் இருந்து தப்பிக்க முயன்றபோது அந்த இடம் விரைவில் குழப்பமான சூழ்நிலைக்கு மாறியது.
குறுகலான அந்தப் பகுதியில் திரண்டிருந்த பக்தர்கள், நெரிசலில் இருந்து தப்பிக்க முயன்றபோது அந்த இடம் விரைவில் குழப்பமான சூழ்நிலைக்கு மாறியது.
காயமடைந்தவர்கள் வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனை, கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் பிச்சோலிமில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தகவலறிந்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனை மற்றும் பிச்சோலிம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று நிலவரத்தை கேட்டறிந்தார்.
தனது X பக்கத்தில் இரங்கல் தெரிவித்த பிரமோத் சாவந்த் அதில், "ஷிர்கானில் இன்று காலை நடைபெற்ற லைராய் ஜாத்ராவில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். காயமடைந்தவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றேன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தேன். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த நான் தனிப்பட்ட முறையில் நிலைமையைக் கண்காணித்து வருகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "கோவாவின் ஷிர்கானில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வரவும், நிகழ்வை கண்காணிக்கவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதில் வடக்கு கோவா மாவட்ட போலீசார், இந்திய ரிசர்வ் பட்டாலியன் மற்றும் கோவா ரிசர்வ் போலீஸ் படையினர் அடங்குவர்.
கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
"கோவாவில் ஷிர்காவ்வில் உள்ள லேரை தேவி கோயிலுக்குச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல பக்தர்கள் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்" என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Read in English: Stampede during festival at Goa temple leaves at least 6 dead, several injured