திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க வரும் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக, திருப்பதி விமானநிலையத்தில் பிரமாண்ட ஓய்விடம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளில் இருந்தும் பெரும்பாலோனார் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தங்கி சிறப்பாக சாமி தரிசனம் செய்யும் பொருட்டு, ரேணிகுண்டாவில் அமைந்துள்ள திருப்பதி விமானநிலைய வளாகத்தில் 1800சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பயணிகள் ஓய்வறை விரைவில் கட்டப்பட உள்ளது.
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுக்கு சொந்தமான அந்த இடத்தை, ஆந்திர மாநில கல்வி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடம் 15 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக, அந்த கழகத்திடம் இருந்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆண்டு ஒன்றுக்கு ரூ.1யை உரிமக்கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இந்த கழகம், பயணிகள் ஓய்வறையை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை இந்த காலத்தில் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டில், திருப்பதி விமானநிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினலை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். கருடர் வடிவமைப்பில் இந்த டெர்மினல் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.டி மற்றும் சி ரக விமானங்களை கையாளும் வகையில் இந்த விமானநிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த டெர்மினல், ஒரேநேரத்தில் 200 வெளிநாட்டு பயணிகள் மட்டுமல்லாது 500 உள்நாட்டு பயணிகளையும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இந்த டெர்மினலில், பயணிகளின் வசதிக்காக 4 இமிகிரேசன் கவுண்டர்கள், 18 செக் இன் கவுண்டர்கள், 2 விஐபி லவுஞ்சுகள், 200 கார்கள் நிறுத்தும் வகையிலான இடம் உள்ளிட்டவைகள் உள்ளன.
திருப்பதி விமானநிலையத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எளிதாக செல்ல வாடகை கார், பஸ், டாக்ஸி உள்ளிட்ட சேவைகள் உள்ளன. திருப்பதி விமானநிலையத்தில் இருந்து மதுரை, சென்னை, ஐதராபாத், புனே, வாரணாசி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.