திருச்சி விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “புதுச்சேரியில் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். வெள்ளிக்கிழமைதோறும் 2 மணி நேரம் பெண்களுக்கான நேரச் சலுகை. பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. இது பெண்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
தமிழகத்திலிருந்து ஜிப்மரை கண்டித்து சிலர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஜிப்மரில் ஏழை மக்களுக்காக முற்றறிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.
வேண்டுமென்றே அங்கே சிலர் பிரச்சனைகளை ஏற்படுத்த நினைக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நிர்வாக ரீதியாக எல்லாவற்றையும் சரி செய்து வருகிறோம். ஆளுநர் பதவி தேவையில்லை என்று சொல்கிறார்கள்.
சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. நமது அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர் பதவி ஒன்று உள்ளது. ஆனால் இவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பொழுது ஆளுநர் பதவி தேவையில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள். எதிர்க் கட்சியாக இருக்கும் பொழுது ராஜ்பவன் படியை மிதித்தார்கள். எதற்கெடுத்தாலும் ராஜ்பவன் சென்று புகார்களை கொடுத்தார்கள். எதிர்க் கட்சியாக இருந்த போது ஆளுநர் வேண்டும். ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநர் வேண்டாம் என்பது என்ன?” என்றார்.
கடுமையான விமர்சனம் கூடாது
தொடர்ந்து, “நான் தேர்தல் பற்றி கருத்து சொல்ல மாட்டேன். அரசியல் ரீதியாக சில கருத்துக்களை சொல்வதை யாரும் தடுக்க முடியாது. கருத்துரிமை இருக்கிறது சாதாரண மனிதனுக்கு கருத்தரிமை இருப்பது போல ஆளுநருக்கும் கருத்துரிமை இருக்கிறது. கருத்து சொல்வதில் யாரும் யாரையும் தடுக்க முடியாது. எதிர் கருத்து வேண்டுமானால் சொல்லுங்கள். ஜனநாயக நாட்டில் கருத்து சொல்லக் கூடாது என்று கூற முடியாது. ஆளுநர் விமர்சனம் செய்தால் அதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
நம் கருத்து உரிமை என்பது நமக்கு வேண்டிய கருத்துக்கள் சொல்லப்பட்டால் அது கருத்து உரிமை. சட்ட மசோதா பற்றி பேசும் போது, பல காரணங்கள் இருக்கலாம். ஆளுநர் அதை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க கால அவகாசம் உள்ளது. இந்த ஒரு சட்டத்தை (ஆன்லைன்) குறிப்பிடவில்லை. அதற்கு விமர்சனம் செய்து கொண்டிருக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுக்கு பாலாமாக, பலமாக ஆளுநர்கள் இருக்கிறார்கள். அரசாங்கம் ஆளுநர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர் சில கருத்துக்களை சொல்லும் பொழுது அதில் எதிர் கருத்து சொல்ல உரிமை உள்ளது. ஆனால் கடுமையாக விமர்சனம் செய்வது சரியல்ல என்பது எனது கருத்து.
“தி கேரள ஸ்டோரி” படம் பற்றி பேச கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும். அதை நான் பார்க்க வேண்டும். தீவிரவாதம் எந்த இடத்தில் இருந்தாலும் அது அழிக்கப்பட வேண்டும். அடிக்கடி அறிவிப்புகளை கொடுக்கும் அரசை பார்த்திருக்கும். ஆனால் அறிவிப்பை கொடுத்து திரும்பப் பெறும் அரசாக தி.மு.க அரசு உள்ளது என்பது எனது கருத்து” என்று தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“