ஓரினச் சேர்க்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரும் விசாரணையில் இருவர் இயற்கைக்குப் புறம்பாக உடலறவு வைத்துக் கொண்டால் கூட அதை குற்றமாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது
ஓரினச்சேர்க்கை குற்றமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்ட சாசனப் பிரிவு 377 குறித்து பரலவலான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இது குறித்து கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம், ‘பிரிவு 377, சட்ட சாசனத்தை மீறும் வகையில் இருக்கிறது’ என்று தீர்ப்பளித்தது. ஆனால், 2013 ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கில், ‘பிரிவு 377 செல்லும்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து, பிரிவு 377-ஐ முழுவதுமாக சட்டத்திலிருந்து நீக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்தான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கொண்ட 5 பேர் அமர்வு தனது கருத்துகளை தெரிவித்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிக்ள் நாரிமன், குவாலிகர், சந்திராசுந்த், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேதா, ‘அரசு இது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காது. நீதிமன்றத்தின் முடிவுக்கே இந்த விஷயத்தை விட்டு விடுகிறோம்’ என்று கூறினார்.
இதற்கு நீதிமன்ற அமர்வு, ‘நீங்கள், 377- வது பிரிவு குற்றமா இல்லையா என்பது குறித்து முடிவு செய்ய எங்களிடம் விட்டுவிடுகிறீர்களா?’ என்று கேள்வியெழுப்ப அதை ஆமோதித்தது அரசு தரப்பு. தீபக் மிஸ்ரா, ‘எல்ஜிபிடி மக்களுக்கு சில காரணங்களால் ஒதுக்குதல் நடந்தால், 377 வது பிரிவை நாங்கள் சட்ட சாசனத்திலிருந்து நீக்குவதன் மூலம் அது சரி செய்யப்படும். இதனால், அந்த சமூகத்தினர் வாழ்க்கை முழுவதாக வாழ வழி கிடைக்கும்’ என்றார்.
இன்னொறு நீதிபதியான சந்திராசுத், ‘இரு ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரு கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர்களை 377- வது பிரிவின் கீழ் அச்சுறுத்தும் ஒரு நிலையை நாங்கள் உருவாக்க விரும்பவில்லை’ என்று கருத்து கூறினார்.