விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் அறிவித்து வருகிறது. இந்நிலையில், அனைத்து நலத் திட்டங்களையும் விவசாயிகள் எளிதாக அணுகும் வகையில் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக 12 டிஜிட் நம்பர் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் செயலாளர் விவேக் அகர்வால் நமது தளத்துடன் பேசுகையில், "ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவமான ஐடி வழங்குவது, பிஎம் கிசான் போன்ற திட்டங்களின் தரவுகளைச் சேகரித்து மிகப்பெரிய தரவுத்தளத்தை உருவாக்கும் அரசு திட்டத்தின் ஒரு பகுதியாகும். அத்துடன் அவர்களது நிலம் தொடர்பான தகவல்களும் சேர்க்கப்படும்.
இதன் நோக்கமானது ஒருங்கிணைந்த விவசாயிகள் சேவை தளத்தை உருவாக்குவது தான். பிரத்தியேக ஐடி மூலம் பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் கடன் வசதிகளை விவசாயிகள் தடையின்றி பெறலாம்.மேலும் விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள், கொள்முதல் நடவடிக்கைகளைப் போன்றவற்றைத் திட்டமிட மத்திய, மாநில அரசுகளுக்கு உதவியாக அமையும்.
தற்போது, விவசாயிகளுக்கான பிரத்தியேக ஐடியை தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். 8 கோடி விவசாயிகளுடன் தரவுத்தளம் தயாரானதும், நம்பர் வெளியீடும் பணியைத் தொடங்குவோம்.
இதுவரை, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா உட்பட 11 மாநிலங்களுக்குத் தரவுத்தளம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மீதமுள்ள மாநிலங்களுக்கான தரவுத்தளம் தயாரிக்கும் பணி வரவிருக்கும் மாதங்களில் முடிவடையும்.
தற்போதுள்ள திட்டங்களான PM-Kisan,சாயில் ஹேல்த் கார்ட், PM Fasal Bima Yojana போன்ற திட்டங்களின் தரவுகள் மூலம் தரவுத்தளம் தயார் செய்யப்பட்டுவருகிறது. மத்திய திட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகளின் தரவுகளும் மாநில அரசுகளிடம் உள்ள நில பதிவு விவரங்களுடன் இணைக்கப்படும். ஆதார் மூலம் ஒரே டேட்டா மீண்டும் இணைக்காத வகையில் சரிபார்க்கப்படும்" என்றார்.
விவசாயிகளுக்கு இத்தகைய அடையாள அட்டை வழங்கும் திட்டமும், தரவுத்தளத்தை உருவாக்குவது குறித்தும் இம்மாத தொடக்கத்தில் மாநில முதலமைச்சர் பங்கேற்ற வீடியோ கான்பிரன்சிங்கில் விவாதிக்கப்பட்டது.
முன்னதாக செப்டம்பர் 6 அன்று, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், தனது அமைச்சகம் 5.5 கோடி விவசாயிகளின் தரவுத்தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த டிசம்பர் மாதத்திற்குள் அது 8 கோடியாக அதிகரிக்கப்படும் எனக் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
சமீபத்தில், டிஜிட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாய அமைச்சகம் CISCO, Ninjacart, Jio Platforms, ITC, NCDEX e-Markets Ltd (NeML),Microsoft, Star Agribazaar, Esri India Technologies, Patanjali,Amazon உட்பட 10 தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.