குஜராத் சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதத்தோடு நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 18-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும், 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 9-ஆம் தேதி நடத்தப்படும். 93 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்டத் தேர்தல் டிசம்பர் 14 ஆம் தேதி நடத்தப்படும்.
குஜராத் மாநிலத்தில், கடந்த 19 ஆண்டுகளாக பாஜக தான் ஆட்சி செய்து வருகிறது. 1998-ம் ஆண்டிலிருந்து இதுவரை குஜராத் பாஜகவின் கோட்டையாக திகழ்கிறது. நரேந்திர மோடி, அமித் ஷா, எல்.கே.அத்வானி உள்ளிட்ட குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே பாஜக-வின் முக்கிய தலைவர்களாக இருக்கிறார்கள். மத்தியிலும் பாஜக ஆட்சி தான். எனவே, குஜராத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் அந்தக் கட்சி மிகத் தீவிரமாக உள்ளது. அதற்காகவே, குஜராத்தில் இரண்டு மிகப்பெரிய திட்டங்களை சமீபத்தில் தொடக்கிவைத்துள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் இந்தத் தேர்தல் கவுரவப் பிரச்சனை. சொந்த மாநிலத்தில் சறுக்கல் ஏற்பட்டால், அது, அரசியலிலும், சொந்த கட்சியிலும் பிரச்னையை ஏற்படுத்தும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். அதனால், பிரதமர் மோடி தலைமையில் பாஜக முழு மூச்சில் களம் இறங்கியுள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என, அக்கட்சி ஆட்சி நடத்தும் பல மாநில முதல்வர்களும் பிரச்சார களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். குஜராத்தில் மொத்தமுள்ள, 182 இடங்களில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயித்திருக்கிறார் அமித் ஷா.
இது ஒரு புறம் என்றால் மறுபுறம் காங்கிரஸும், துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. குலாம் நபி ஆசாத், அகமது படேல், சச்சின் பைலட் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் குஜராத்தில் முகாமிட்டு பணியாற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ராகுல்காந்தி இன்று முதல் 3 நாட்கள் குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இன்று முதல் வடக்கு குஜராத்தின் மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்த நிலையில், இன்று தனது பயணத்தல் சந்திராலா கிராமத்தில் உள்ள பொதுமக்களுடன் உணவகம் ஒன்றில் காலை உணவு உட்கொண்டார்.
தொடர்ந்து கிராம மக்களிடம் நேரில் சந்தித்து பேசி அவர்களது தேவைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, ஊர்வலமாகச் சென்று புகழ்பெற்ற பனஸ்கந்த் அம்பிகா கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய ராகுல், "இன்று மோடியிடமும், பிஜேபியிடமும் அனைத்தும் இருக்கிறது. மத்தியில் அவர்கள் தான் ஆட்சி செய்கின்றனர். குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கரின் அரசாங்கம் அவர்களுடையது. அவர்கள் மிகவும் வலிமையோடு உள்ளனர். ஆனால், உங்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். வரும் தேர்தலில், குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது நாங்கள் தான்.
ஏனெனில், உண்மை எங்கள் பக்கம் இருக்கிறது. நீங்கள்(பாஜக) எவ்வளவு தான் முயன்றாலும், உண்மை உங்களிடம் இல்லை. குஜராத்தில் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சி அமையப்போகிறது, குஜராத்தின் புதிய எதிர்காலத்தை காங்கிரஸ் உருவாக்கப்போகிறது" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.