Gujarat Weather and Rain Update: குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழைக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35-ஐ தாண்டியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Gujarat Rain Live Updates
மேலும் 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் மக்களை படகு மூலம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். குஜராத்தில் 122 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பூபேந்திர படேலிடம் வெள்ளப்பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார். இதற்கிடையே, அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தொடர் மழை காரணமாக குஜராத்தில் உள்ள ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை பக்க சுவர் இன்று வியாழக்கிழமை காலை இடிந்து விழுந்தது. தண்ணீர் தேங்கியுள்ளதால், ஜாம்நகரின் 71 கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டன. தேவபூமி துவாரகா மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில், அதிகபட்சமாக பன்யாட் தொகுதியில் இன்று காலை 6 மணி வரை 12 மணி நேரத்தில் 15 செ.மீ மழை பெய்துள்ளது. அதேநேரத்தில் கல்யாண்பூர், கம்பாலியா மற்றும் துவாரகா தொகுதிகள் முறையே நான்கு, இரண்டு மற்றும் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளன.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வதோதராவில் வெள்ள நீர் வடிந்தவுடன், அகமதாபாத், சூரத், பருச் மற்றும் ஆனந்த் முனிசிபல் கார்ப்பரேஷனில் இருந்து குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் கருவிகள் மற்றும் கிருமிநாசினிகளுடன் அனுப்பப்படும் என்று படேல் கூறினார். நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் முனிசிபல் இயக்குனருடன் ஒருங்கிணைந்து "திறம்பட சுத்தம் செய்வதற்காக" இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“