குஜராத்தில் உள்ள பலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, நேற்று நள்ளிரவு அஸ்ஸாம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த தகவலை சட்டப்பேரவை உறுப்பினர் குழு அறிக்கை உறுதி செய்துள்ளது. அவர், அஸ்ஸாமுக்கு அழைத்து செல்லப்படுவார் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் கன்னையா குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் இருந்த வட்கம் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அஸ்ஸாம் போலீசார் கைது செய்தனர். எங்களிடம் எஃப்.ஐ.ஆர் நகலை காவல் துறையினர் பகிர்ந்துகொள்ளவில்லை. அவர் மீது அசாமில் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்காக, ஜிக்னேஷை உடனடியாக அஸ்ஸாம் அழைத்து செல்வார்கள் என தெரிகிறது என பதிவிட்டிருந்தார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம், குமாருடன் காங்கிரஸில் மேவானி இணைந்தார். தலித் தலைவராக திகழும் மேவானி, ஹர்திக் படேல் மற்றும் அல்பேஷ் தாக்கூர் ஆகியோருடன் இணைந்து 2017 சட்டமன்றத் தேர்தலின் போது குஜராத்தில் பாஜக மேலாதிக்கத்திற்கு சவால்விடும் வகையில் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி, லலிதேஷ்பதி திரிபாதி ஆகிய இளம் தலைவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்சியை விட்டு விலகியதால், கன்னையா மற்றும் மேவானியின் என்ட்ரி கட்சிக்கு இளைஞர்களின் பலத்தை அதிகரிக்கும் என காங்கிரஸ் நம்புகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil