குஜராத் மாநிலம் (Gujarat) ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில் (கேமிங் ஜோன்) இன்று (சனிக்கிழமை) மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த பெரும் தீ விபத்தில் குழந்தைகள் உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த தீ விபத்து சம்பவத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்று ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் பிரபாவ் ஜோஷி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “கொட்டகையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. சுமார் 25 நிமிடங்களுக்கு முன்பு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் இடிபாடுகளில் இருந்து இன்னும் புகை வெளியேறுகிறது. மேலும் பலர் அதில் சிக்கியிருக்கலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம், ”என்று கூறினார்.
இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி ஐ.வி கேர் பேசுகையில், "தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. காணாமல் போனவர்கள் பற்றிய எந்த செய்தியும் எங்களுக்கு வரவில்லை. காற்றின் வேகம் காரணமாக தற்காலிக கட்டிடம் இடிந்து விழுந்ததால் தீயை அணைப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறோம்." என்று தெரிவித்தார்.
தீயணைப்பு அதிகாரி ஆர்.ஏ.ஜோபன் கூறுகையில், "இந்த நேரத்தில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை எங்களால் தெரிவிக்க முடியவில்லை. சம்பவத்தின் இரு தரப்பிலிருந்தும் உடல்களை மீட்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. தற்போது தேடுதல் பணி நடந்து வருகிறது." என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "விளையாட்டு அரங்கில் உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நகர நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராஜ்கோட் விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக மாநகராட்சி மற்றும் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“