"இது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலம்." பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் அமிர்தசரஸின் இந்து கல்லூரியில் தான் இருந்த நாட்களை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு தான் குறிப்பிடுகிறார். இந்தியாவின் மரியாதைக்குரிய தலைவராக மன்மோகன் சிங் உருவாவதற்கு அடித்தளமிட்டது இந்த இடங்கள் தான்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Happiest period of my life’: Manmohan Singh on his time at Panjab University
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தின் மிகவும் புகழ்பெற்ற முன்னாள் மாணவராக மன்மோகன் சிங் விளங்கினார். அறிவுத்திறன் மற்றும் பணிவான நடத்தைக்காக மன்மோகன் சிங் கொண்டாடப்பட்டார். தனது வெற்றியை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் டாக்டர் எஸ்.பி. ரங்னேகர் போன்ற வழிகாட்டிகளுக்கு மன்மோகன் சிங் சமர்ப்பித்தார். பழைமை வாய்ந்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மன்மோகன் சிங் பயில்வதற்கு, ரங்னேகர் ஊக்கமளித்தார். 1957 இல் மூத்த விரிவுரையாளராகத் திரும்பிய மன்மோகன் சிங், 1966 வரை பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கல்வி பணியாற்றினார். 33 வயதில் அவர் முழு நேர பேராசிரியரானார். இது மன்மோகன் சிங்கின் திறமைக்கு ஒரு சான்றாகும்.
தனது பல்கலைக்கழக நாட்கள் குறித்து கடந்த 2018-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். "ரங்னேகரும் அவரது மனைவி ஷாலினியும், தன்னை குடும்பத்தில் ஒருவராக பாவித்தனர்" என மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். அதுவே தனது வாழ்நாளின் மகிழ்ச்சியான நாட்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் டெல்லிக்கு சென்ற பின்னரும், அவரது இதயத்திற்கு நெருக்கமாக சண்டிகர் இருந்தது. மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவு குர்ஷரன் கவுருக்கு செக்டார் 11-ல் வீடு இருந்தது. அந்த வீட்டை மன்மோகன் சிங்கின் நண்பர்கள பராமரித்தனர். சண்டிகரில் உள்ள கிராமப்புற மற்றும் தொழில்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினராக மன்மோகன் சிங் இருந்தார். இந்த மையத்தின் நிர்வாக துணைத் தலைவரான மறைந்த டாக்டர் ரஷ்பால் மல்ஹோத்ராவுடன் மன்மோகன் சிங் நெருக்கமாக இருந்தார்.
பல்கலைக்கழகத்தின் வாசக அரங்கிற்கு, 3,500 புத்தகங்களை மன்மோகன் சிங் வழங்கினார். இவை அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமிர்தசரஸின் இந்து கல்லூரி மூலமாகவே, தான் இந்த நிலையை அடைந்ததாக மன்மோகன் சிங் குறிப்பிட்டுருந்தார். கல்வி பயின்ற நாள்களில் முதன்மையான மதிப்பெண்கள் பெறும் மாணவராக மன்மோகன் சிங் விளங்கினார்.
மன்மோகன் சிங்கின் அறிவாற்றல், அவரை பஞ்சாபில் இருந்து கேம்ப்ரிட்ஜ் வரை அழைத்துச் சென்றது. அங்கு அவர் பொருளியல் ஹானர்ஸ் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர், ஆக்ஸ்ஃபோர்டில் டி.பில் பட்டம் பெற்றார். கடந்த 1964-ஆம் ஆண்டு அவர் எழுதிய 'India’s Export Trends and Prospects for Self-Sustained Growth' என்ற புத்தகம், இந்தியாவின் உள்நோக்கிய வர்த்தக கொள்கைகள் குறித்து குறிப்பிட்டிருந்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மன்மோகன் சிங் உரையாற்றினார். அப்போது, மதம், சாதி, மொழி போன்ற காரணிகளால் இந்தியாவை பிரிவுபடுத்த முயற்சிகள் நடைபெறுவதாகவும், இவை இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்துலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி இலக்கியத்திற்கான கௌரவ டாக்டர் பட்டத்தை, மன்மோகன் சிங்கிற்கு பஞ்சாப் பல்கலைக்கழகம் வழங்கியது. இதேபோல், 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி, சட்டத்திற்கான கௌரவ டாக்டர் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் இந்தர் குமார் குஜ்ராலைப் போலவே, மன்மோகன் சிங்கும் இப்போது பாகிஸ்தானில் உள்ள ஜீலத்தில் பிறந்தார். பிரிவினைக்குப் பிறகு அவரது குடும்பம் அமிர்தசரஸில் குடியேறியது. குஜ்ராலின் குடும்பம் ஜலந்தருக்கு இடம் பெயர்ந்தது.
மன்மோகன் சிங்கின் மரணம், சண்டிகருக்கு தனிப்பட்ட இழப்பாக உணரப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.