ஹரியானா மாநிலத்தில் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக 12-ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் யாமுநகரில் செயல்பட்டுவரும் விவேகானந்தா பள்ளியில்தான் இச்சம்பவம் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட மாணவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் காலியா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம், குறிப்பாக எந்த இடத்தில் நடைபெற்றது என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், இந்த கொலைக்கான காரணம் என்ன என்பதும், மாணவரும் பள்ளி முதல்வரும் ஒரே பள்ளியை சேர்ந்தவர்கள்தான் என்பதுபோன்ற தகவல்களும் வெளியாகவில்லை.
இந்தியாவின் பல பகுதிகளில் மாணவர்கள் - ஆசிரியர்கள் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், சென்னை பெரம்பூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில், தாமதமாக வந்த மாணவனுக்கு வாத்து தண்டனை அளித்ததால் அம்மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.