எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் பல விரிசல்கள் ஏற்பட்டுள்ள நேரத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் பாரத் ஜோடோ நீதி யாத்திரைக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என்று கூறினார். கடந்த மாதம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும், மேற்கு வங்கத்தில் யாத்திரை நுழையவிருந்தபோது, இதே கருத்தை முன்வைத்திருந்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Haven’t been invited, says Akhilesh Yadav on Rahul Gandhi’s Bharat Jodo Nyay Yatra; Congress clarifies
அதேநேரம், உத்தரபிரதேசத்தில் யாத்திரையின் விரிவான பாதை மற்றும் திட்டம் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்பட்ட பிறகு இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை கூறியது.
சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “பிரச்சனை என்னவென்றால், பல பெரிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன, ஆனால் எங்களுக்கு அழைப்பு வரவில்லை” என்று கூறியிருந்தார்.
அகிலேஷ் யாதவின் வீடியோவை டேக் செய்து, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில், “உத்தரபிரதேசத்தில் பாரத் ஜோடோ நீதி யாத்ராவின் விரிவான பாதை மற்றும் திட்டம் தயாராகி வருகிறது. ஓரிரு நாளில் இறுதி செய்யப்படும். இதற்குப் பிறகு, மாநிலத்தில் உள்ள இந்தியா கூட்டணியின் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். பாரத் ஜோடோ நீதி யாத்திரையில் அவர் பங்கேற்பது இந்தியா கூட்டணியை மேலும் வலுப்படுத்தும். பிப்ரவரி 16 பிற்பகலில் யாத்திரை உ.பி.க்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் ராகுல் காந்தி தலைமையிலான யாத்திரையை குறிவைத்து, மம்தா பானர்ஜியின் கண்டனத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆளாகியுள்ளது, இது மாநிலத்தில் உள்ள முஸ்லீம்களிடையே "சுர்சூரியை (ஒரு பரபரப்பை உருவாக்க)" முயற்சிப்பதாகக் கூறிய மம்தா பானர்ஜி, இது ஒரு "போட்டோ ஷூட் எடுப்பதை" விட சற்று அதிகம் என்றும் கூறினார். மம்தா பானர்ஜி, மேற்கு வங்கம் வழியாகச் செல்லும் போது யாத்திரையிலிருந்து விலகி இருக்க முடிவு செய்தார், வங்காளத்தின் வழியாகச் செல்லும் ராகுல் காந்தி யாத்திரையில் தான் கண்டுக் கொள்ளப்படவில்லை என்று மம்தா பானர்ஜி மீண்டும் வலியுறுத்தினார்.
தற்போது ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் இந்த யாத்திரையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சம்பாய் சோரன் பங்கேற்றார். ஜே.எம்.எம் இந்திய கூட்டணியின் ஒரு அங்கமாகும்.
இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை, லோக்சபா தேர்தல்கள் நெருங்கி வருவதால், கூட்டணிக்கு, மாநிலங்கள் முழுவதும் அதன் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க முடிவதற்குப் பதிலாக, தொகுதிப் பங்கீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. கூட்டணியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கூட்டணியை விட்டு வெளியேறி, NDA பக்கம் திரும்பி, பீகாரில் BJP ஆதரவுடன் ஆட்சியை அமைத்ததால், இந்தியா கூட்டணியின் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“