ஆந்திர சட்டப்பேரவையில் வட்டியில்லா கடன்கள் தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
ஆந்திர சட்டசபையில் பட்ஜெட் மற்றும் விவசாயிகளின் குறைகள் தொடர்பான விவாதங்கள் எழுந்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தவறாக கூறியுள்ளார் என உரிமை மீறல் தீர்மான நோட்டீசைக் கொண்டு வந்தனர்.
பின்னர், பேசிய சந்திரபாபு நாயுடு, ‘இந்த தீர்மானத்திற்கு ஜெகன்மோகன் ரெட்டி சரியான விளக்கம் அளித்தால் பதவி விலக தயார். அப்படித் தவறான தகவல்களை ஜெகன் அளித்துள்ளார் என நாங்கள் நிரூபித்தால் பதவி விலக அவர் தயாரா?’ என சவால் விடுத்தார்.
இதனையடுத்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அந்த நோட்டீசுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி,”மோசமான பருவநிலை மாற்றத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட முந்தைய சந்திரபாபு அரசு நிதியாக வழங்கவில்லை. பயிர்களுக்கான விதைகளை கொள்முதல்கூட செய்யவில்லை. இது மிகவும் மோசமான சூழல். நவம்பர் மாதத்தில் விதை கொள்முதல் செய்ய தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிக்க வேண்டும். நாங்கள் பதவி ஏற்றபோது அந்த விதைகள் விற்பனைக்கே அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், முந்தைய அரசின் அலட்சியத்தால் 50 குவிண்டால் அளவுதான் விதைகள் இருக்கின்றன. மேலும் முந்தைய அரசு தரவேண்டிய உள்நாட்டு மானியமான ரூ.2000 கோடியை நாங்கள் விரைவில் வழங்குவோம்” என்று பேசிக் கொண்டிருக்க, அவரை தொடர்ந்து பேச விடாமல் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் மோகன் ரெட்டி, “எங்கள் ஆதரவாளர்கள் இங்கு 150 பேர் உள்ளனர். அவர்கள் எழுந்து வந்தால் நீங்கள் தரையில்கூட அமர முடியாது. என்ன பேசுகிறீர்கள் நீங்கள்?. உங்களிடம் மரியாதை இல்லை, கௌரவம் இல்லை. முதல்வர் என்ற முறையில் நான் தனியாக நின்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு பேசும்போது நாங்கள் யாராவது வாய்திறந்தோமா? யாருக்காவது அறிவு உள்ளதா? இங்கு சட்டமன்ற கூட்டம் நடப்பது உங்களில் ஒருவருக்காவது ஞாபகம் உள்ளதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவைப் பார்த்து, ‘நீங்கள் இப்படி கண்களைப் பெரிதாக்கிப் பார்த்தால் நாங்கள் அனைவரும் பயந்துவிடுவோமா என்ன? எங்களுக்கு பயம் இல்லை. உங்கள் ஆதரவாளர்களை முதலில் அமரச் சொல்லுங்கள்?’ என்று உஷ்ணம் கொப்பளிக்க பேசினார். இதனால் ஆந்திர சட்டப்பேரவையில் அமளி எழுந்தது.
#WATCH Ruckus ensued at Andhra assembly. TDP gave Privilege motion alleging CM has given wrong info about interest free loans to farmers.Chandrababu Naidu challenged CM JM Reddy asking if he’ll resign.Later TDP MLAs started interrupting CM’s speech, when he was replying to notice pic.twitter.com/j0e8r3SttV
— ANI (@ANI) 12 July 2019
இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.