இமாச்சல பிரதேசத்தில் கனமழை ஏற்படுத்திய பேரழிவில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் வெவ்வேறு சம்பவங்களில் 41 பேர் இறந்துள்ளனர், தலைநகர் சிம்லாவில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பலப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இமாச்சல பிரதேசத்தில் கனமழை ஏற்படுத்திய பேரழிவில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் வெவ்வேறு சம்பவங்களில் 41 பேர் இறந்துள்ளனர், தலைநகர் சிம்லாவில் இன்று இரண்டு நிலச்சரிவுகள் தாக்கியதில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் உள்ள சிவன் கோயில் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர், அதே நேரத்தில் ஃபாக்லி பகுதியில் இருந்து ஐந்து உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன, அங்கு பல வீடுகள் சேறு மற்றும் சேற்றில் புதைந்து உள்ளன.
இதையும் படியுங்கள்: முஸ்லிம்கள் கிராமங்களுக்குள் நுழைய தடை: ஹரியானா பஞ்சாயத்துகளுக்கு ஷோகாஸ் நோட்டீஸ்
இதற்கிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) திங்களன்று குலு, கின்னவுர் மற்றும் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டியைத் தவிர, மாநிலத்தின் 12 மாவட்டங்களில் ஒன்பது மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது மற்றும் செவ்வாய்கிழமை மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இமாச்சல் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை தீவிர மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இமாச்சலத்தில் முக்கியமான சிம்லா-சண்டிகர் சாலை உட்பட மொத்தம் 752 சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு, வானிலை ஆய்வு மையத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் காவல்துறை மற்றும் SDRF குழு உஷார் நிலையில் உள்ளது. கனமழை காரணமாக சார்தாம் யாத்திரை இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அலக்நந்தா, மந்தாகினி மற்றும் கங்கை நதிகள் ருத்ரபிரயாக், ஸ்ரீநகர் மற்றும் தேவ்பிரயாக் ஆகிய இடங்களில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்து வருவதாக பேரிடர் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் "மிகவும் துயரமானது" என்றும் கூறினார்.
"இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் இழப்புகள் மிகவும் வேதனையளிக்கிறது. NDRF குழுக்கள் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்குத் தரட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று அமித் ஷா X தளத்தில் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil