கனடாவில் பிராம்டன் பகுதியில் உள்ள இந்துக் கோயிலுக்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் சென்றிருந்தபோது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வன்முறையில் ஈடுபட்டதற்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கனடாவின் பிராம்டனில் உள்ள இந்து சபா கோயிலில் நடந்த தாக்குதல் ஏற்கத்தக்கது அல்ல. இங்கு வாழும் ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் விரும்பும் நம்பிக்கையை சுதந்திரமாக, பாதுகாப்பாக பின்பற்றும் உரிமை உள்ளது. இந்தச் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு இந்து சமயத்தினரைப் பாதுகாத்த காவல்துறைக்குப் பாராட்டுகள்” என்று பிரதமர் ட்ரூடோ எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Violent clashes at Brampton Hindu temple amid visit by Indian consul officers
மேலும் பிராம்டன் கோயிலில் நடந்த தாக்குதலுக்கு இந்து கனடியன் ஃப்வுண்டேஷனும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோயிலில் தாக்குதல் நடந்தபோது பெண்கள், குழந்தைகள் இருந்த நிலையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
கோயிலில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் இந்திய தேசிய கொடியை அசைத்து இந்து சபா மந்திர் கோவிலின் மைதானத்தில் மோதியதும், அப்போது சிலர் கம்புகளைப் பயன்படுத்தியதும் வீடியோவில் வெளியானது.
இந்தச் சம்பவம் குறித்து பீல் பிரந்திய காவல்துறை தலைவர் நிஷான் துரையப்பா கூறுகையில், “கோயில் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அதனைத் தணிக்க கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான வழியில் போராட எல்லோருக்கும் உரிமை உண்டு, ஆனால் இதுபோன்ற வன்முறை செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம். இந்த வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்” என்றார்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற வழக்கமான நிகழ்வுகளுக்கு கனடா அரசு முன்னேற்பாடாக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
இந்தப் பதட்டங்கள் ஒன்டாரியோவைத் தாண்டி சர்ரே வரையிலும் பரவிய நிலையில் இந்தியா அறக்கட்டளையின் தலைவர் மனிந்தர் கில் இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தார்.
வாழ்வாதார சான்றிதழ் வழங்க கோரி கடந்த சனிக்கிழமை சுவாமிநாராயண் கோவில் மற்றும் கல்சா திவான் சொசைட்டி குருத்வாரா, ராஸ் தெரு, சர்ரே பகுதிகளில் சிலர் தாக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“