உலக அழகிப்போட்டிக்குப் பின்னான உலக அரசியல், சந்தைமய பொருளாதாரம், பொதுபுத்தியில் அழகின் மீதான கற்பிதத்தை திணிப்பது என பல நுண்ணரசியல் குறித்து நமக்கெல்லாம் தெரிந்தாலும், இந்தியாவை சேர்ந்த பெண் 17 ஆண்டுகள் கழிந்து அந்த கிரீடத்தை தன் தலையில் சுமக்கும்போது மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை.
இறுதிச்சுற்றில் இந்தியா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து, கென்யா, மெக்ஸிகோ நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கு பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.
1. மனுஷி சில்லார், இந்தியா:
கேள்வி: ”உங்களை பொறுத்தவரை அதிக சம்பளம் தரப்படுவதற்கு தகுதியான வேலை எது?”
பதில்: ”அம்மாவுக்கு பெரும் மரியாதையை அளிக்க வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் சம்பளம் குறித்து கேட்கிறீர்கள். ஆனால், அது எப்போதும் பணமாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. ஆனால், அது நீங்கள் தடும் அன்பு மற்றும் மரியாதையாகவும் இருக்கலாம். என் வாழ்க்கையில் என்னுடைய அம்மா பெரும் உந்துதலாக எப்போதும் இருந்திருக்கிறார். எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்காக பலவற்றை தியாகம் செய்திருக்கின்றனர். அதனால், அம்மாக்களுக்குத்தான் அதிக சம்பளம் தர வேண்டும் என நான் நினைக்கிறேன்”.
2. ஸ்டீஃபானி ஹில், இங்கிலாந்து:
கேள்வி: ”உலக தலைவர்கள் முன்னிலையில் நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் நீங்கள் எது குறித்து பேசுவீர்கள்?”
பதில்: ”எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், உலகளவில் மருத்துவ துறையில் நிலவும் முரண்பாடுகள் குறித்து பேசுவேன். இதுகுறித்து நெருக்கடி தீர வேண்டும்.”
3. ஆரோர் கிச்சனின், ஃபிரான்ஸ்:
கேள்வி: ”உலகின் மிகச்சிறந்த கண்டுப்பிடிப்பு என்ன? ஏன்?”
பதில்: ”போக்குவரத்துதான் உலகின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. மற்ற நாடுகளுடன் தொடர்பு கொண்டிருக்க போக்குவரத்து தான் முக்கியம்.”
4. மேக்லின் ஜெரூட்டோ, கென்யா:
கேள்வி: ”இணையத்தில் ஒருவரை தாக்குதல் இன்று உலகின் மிகப்பெரும் பிரச்சனை. நீங்கள் அதனை எப்படி தீர்ப்பீர்கள்?”
பதில்: ”இது உலகின் மிக முக்கியமான பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
5. ஆண்ட்ரியா மெசா, மெக்ஸிகோ:
கேள்வி: ”உலக அழகிக்கு முக்கியமாக இருக்க வேண்டிய தகுதியாக எதை நினைக்கிறீர்கள்?”
பதில்: “அன்புதான் முக்கியம். அவளை எவ்வளவு நேசிக்கிறாள், உலகின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் என்பது முக்கியம். உலக அழகி என்பவள் எல்லோரிடமும் பேசுபவளாகவும், எல்லோரையும் சந்திப்பவளாகவும் இருக்க வேண்டும்.”