பாகிஸ்தானில் ஹூண்டாய் டீலர் ஒருவர் காஷ்மீர் ஒற்றுமை தினத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவு ஹூண்டாய்பாகிஸ்தான் டிவிட்டர் கணக்கில் இருந்து வெளியானதால் சர்ச்சைக்குள்ளானது.
இதையடுத்து காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஹூண்டாய் நிறுவனம் எடுத்துள்ளதாக நெட்டிசன்கள் குறை கூற தொடங்கினர்.
#BoycottHyundai (ஹூண்டாய் தயாரிப்பை புறக்கணிப்போம்) என்ற ஹாஷ்டாக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இந்நிலையில், ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இதற்கு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியச் சந்தையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. தேசியத்தை மதிப்பதில் உறுதியாக இருக்கிறோம். ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாம் வீடு இந்தியா. உணர்வுகளை மதிக்காத கருத்துகள் வெளியிடப்படுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இந்தியா மற்றும் இந்தியர்களின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் மாருதி சுஸுக்கி இந்தியா நிறுவனத்துக்கு பிறகு அதிக அளவு கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஹூண்டாய் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil''