அரசியல்வாதியாக நூறு சதவிகிதம் சிறப்பாக செயல்படுவேன் என்ற ஆன்மீக சுற்றுலா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறினார்.
ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, நேற்று ரிஷிகேஷ் சென்றடைந்தார். அங்கு தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் தியானம் மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது :
நான் 1995-ம் ஆண்டில் இருந்து இமயமலைக்கு வருகிறேன். இடையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது வர முடியவில்லை. ஒரு மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்வதுதான் அவனுடைய பிறவியின் முக்கிய வேலை.
அதற்காகத்தான் இங்கு வருகிறேன். நிறைய தியானம் செய்வதற்காகவும், ஆன்மீக புத்தகங்கள் படிப்பதற்காகவும், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மக்களை சந்திப்பதற்காகவும் இங்கு வந்திருக்கிறேன். இங்கே எனக்கு சினிமா துறையினர், அரசியல்வாதிகள் யாரும் தேவையில்லை. மக்கள், இயற்கை போதும்.
தமிழகத்தில் என்னால் சுதந்திரமாக நடமாட முடியாது. மக்களோடு மக்களாக இருப்பதுதான் எனக்கு பிடிக்கும். ஆனால் அந்த சுதந்திரத்தை எப்போதோ இழந்து விட்டேன்.
முன்பு இமயமலை வரும்போது சுதந்திரமாக இருந்தேன். ஆனால் இனி இங்கும் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்து கொண்டேன்.
ஒரு நடிகனாக இறைவன் எனக்கு கொடுத்த வேடத்தை சரியாக செய்து விட்டதாக உணர்கிறேன். இப்போது அரசியல்வாதி என்ற பாத்திரத்தை இறைவன் கொடுத்து இருக்கிறான். இதையும் 100 சதவீதம் சிறப்பாக செய்வேன் என்று நம்புகிறேன்.
இந்த பயணத்துக்குப் பிறகு ஒரு அரசியல்வாதியாக நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை பார்க்கப்போகிறீர்கள். அரசியலை மக்களுக்கு சேவை செய்யும் களமாகவே பார்க்கிறேன். அதற்காக நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். மக்களிடம் எதிர்பார்ப்புகள் இருக்கும்.
அனைத்துக்கும் தயாராகி இருக்கிறேன். அரசியலை முன்னிட்டு இந்த ஆன்மீக பயணமா என்று கேட்கிறீர்கள். அப்படியும் இதை வைத்து கொள்ளலாம்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.