அடுத்த மக்களவைத் தேர்தலில் தனது கட்சிக்கு 300 இடங்கள் கிடைக்கும் என கருதவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா கதி பகுதியில் நடைபெற்ற பேரணி ஒன்றில குலாம் நபி ஆசார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சட்டப்பிரிவு 370 வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும், அதனை மத்திய அரசால் மட்டுமே மீட்டெடுக்க முடியும். பாஜக தலைமையிலான மத்திய அரசு சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ததால், அதை மீட்டெடுப்பது இயலாத ஒன்று.
ஏனென்றால், அதனை செய்திட 300 எம்.பிக்கள் கைவசம் வேண்டும். வரும் மக்களவை தேர்தலில் 300 எம்.பி.க்களை பெற வேண்டும் என்பதால், சட்டப்பிரிவு 370ஐ மீட்டெடுப்பதாக நான் உறுதியளிக்க முடியாது. கடவுள் எங்களுக்கு 300 எம்.பி.க்களை தரட்டும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அது நடக்கும் என நினைக்கவில்லை. அதனால் தான், எந்த பொய்யான வாக்குறுதியையும் கொடுக்க மாட்டேன். சட்டப்பிரிவு 370 பற்றி பேசுவதை தவிர்க்கிறேன்" என்றார்.
தற்போது பூஞ்ச், ரஜோரி சுற்றுப்பயணம் செய்யும் ஆசாத், "காஷ்மீரில் 370 வது பிரிவைப் பற்றி பேசுவது பொருத்தமற்றது. தனது முக்கிய கோரிக்கைகள் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது, காஷ்மீரில் முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது தான்" என்றார்.
இவரது பேச்சை NC துணைத் தலைவர் உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணை வருவதற்கு முன்பே மூத்த காங்கிரஸ் தலைவர் தோல்வியை ஒப்புக்கொண்டார் என கூறியுள்ளார்.
இவரது விமர்சனத்துக்கு பதிலளித்த ஆசாத், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதையும் தான் எதிர்க்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் மட்டுமே இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன்.
அரசாங்கத்துடனான எங்கள் போராட்டம் என்னவென்றால், சட்டப்பிரிவு 370 ரத்து செய்து, மாநிலத்தை பிரித்து, அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு உரிமை உண்டு. ஆனால் அது ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை மூலம் வர வேண்டும். நாடாளுமன்றம் வழியாக அல்ல" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil