பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, குழந்தைகள் காப்பகம் பற்றிய மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் குழந்தைகள் காப்பகம் ஒன்று பணத்திற்காக குழந்தைகளை விற்றுள்ளது.
மதர் தெரசா என்ற பெயரில் இயங்கி வரும் அந்த காப்பகம், நான்கு குழந்தைகளை பணத்திற்காக விற்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் அனைத்து குழந்தைகள் காப்பகமும் முறைப்படி மத்திய அரசின் காரா மையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் தத்தம் மாநிலங்களில் இருக்கும் காரா ( Central Adoption Resource Authority) மையத்தில் குழந்தைகள் காப்பகம் தங்களின் பெயர்களை கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும் என 2015ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவிற்கு பின்னர் இது வரை சுமார் 2300 குழந்தைகள் காப்பகங்கள் காராவில் தங்களுடைய விபரங்களை பதிவு செய்திருக்கின்றன. ஆனால் இன்னும் 4000 குழந்தைகள் காப்பகங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன.
குழந்தைகள் காப்பகங்கள், கடத்தல்கள், குழந்தைகளை விற்றல் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினார் மேனகா காந்தி.