குர்கிராமில் வேலை பறிபோனதால், பெண் ஊழியர் அலுவலக கட்டடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியின் தென்மேற்குபகுதியில் உள்ள குர்கிராம் பகுதி. இது பைனான்சியல் மற்றும் டெக்னாலஜி ஹப் ஆக விளங்குகிறது. இங்குள்ள சைபர் சிட்டியில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சைபர் சிட்டியின் செக்டார் 18 பகுதியில் இயங்கி வரும் தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தின் பெண் ஊழியர், அந்த அலுவலக கட்டடத்தின் மாடியிலிருந்து குதிக்க முயன்றார். விபரமறிந்தவர்கள் உடனடியாக போலீசிற்கு தகவல் அளித்தனர்.
தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் ஒருவர் தொடர்ந்து பேசியபடி இருந்தார். அவர் குதிப்பதை அவர் தாமதப்படுத்தினார். இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அலுவலக நிர்வாகியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பெண் ஊழியருக்கு வேலை திரும்ப வழங்க உத்தரவிட்டதையடுத்து, அந்த பெண் தற்கொலை எண்ணத்தை மாற்றி கீழிறங்கி வந்தார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.