நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தடுக்கும் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது. முடிவுகள் ஜூலை 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை (ஜூலை 25) பொறுப்பேற்க உள்ளார்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எ.ல்ஏ.க்கள் பெருமளவு அணி மாறி வாக்களித்துள்ளனர். இங்கு எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு வெறும் 9 பேர் மட்டும் ஆதரவளித்துள்ளனர்.
அதாவது கட்சி கொறடா விதியை மீறி திரௌபதி முர்முவை ஆதரவளித்துள்ளனர். ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 81 உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர்களில் ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் 30 பேரும், பாரதிய ஜனதாவில் 26 பேரும், மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியான காங்கிரஸில் 18 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
மற்றவர்கள் முறையே அனைத்திந்திய மாணவர் அமைப்பு 2, சுயேச்சை 2, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்), தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு உறுப்பினர்களும் உள்ளனர்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அலோக் துபே, ‘குறைந்தப்பட்சம் 9 பேர் திரௌபதி முர்முவை ஆதரித்து இருக்கலாம். அவர்கள் யார் என்பது குறித்து ஆராய்ந்துவருகிறோம்.
மேலும் ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 பேர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆகையால் அவர்கள் திரௌபதி முர்முவை ஆதரித்து இருக்கலாம்.
எனினும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்ததை பார்க்கையில் ஆபரேஷன் தாமரை ஜார்க்கண்டில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றே தோன்றுகிறது. அதற்கான சமிக்ஞை ஆகவே இதனைப் பார்க்கிறோம்” என்றார்.
மற்றொரு காங்கிரஸ் மூத்தத் தலைவர், “பழங்குடி எம்எல்ஏக்கள் திரௌபதி முர்முவை ஆதரித்ததை தவறாக பார்க்கவில்லை. ஆனால் இந்த ஆட்சியை இழிவுப்படுத்தும், கவிழ்க்கும் திட்டம் பாஜகவிடம் உள்ளது” என்றார்.
மேலும், சுரங்க ஊழல் பிரச்சினையில் வேறு முதலமைச்சரின் உதவியாளர் கைதுசெய்யப்பட்டார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் குறித்து ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா இதுவரை வாய் திறக்கவில்லை.
எனினும் பாஜக தொண்டர் ஒருவர் கூறுகையில், ‘மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே உள்ளன. அதற்குள் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என மாநிலத் தலைமை நினைக்கவில்லை.
ஆனால், குறைந்த அளவு உறுப்பினர்களின் ஆதரவில் செயல்படும் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்களில் ஒரு தரப்பு கருதுகிறது” என்றார்.
ஜார்க்கண்டில் ஆளுங்கட்சி, காங்கிரஸ் கூட்டணி திருப்திகரமாக இல்லை. இதனை சரிகட்ட காங்கிரஸிற்கு சில பதவிகளை ஆஞங்கட்சி விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.