ராகுல் காந்தி ஹரியானாவில் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) 4-வது நாள் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) 21-ம் நூற்றாண்டின் கௌரவர்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை பார்க்கும்போது “ஜெய் சியா ராம்” என்று கோஷமிடச் சொல்லுங்கள் என்றும் அவர் கூறி வலதுசாரி அமைப்பு மற்றும் ஆளும் பா.ஜ.க மீது கடுமையான விமர்சனம் செய்தார்.
மேலும், மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போரிட்ட மாநிலம் இது என்று கூறினார். 21-ம் நூற்றாண்டின் கௌரவர்களைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவர்கள் காக்கி நிறத்தில் அரைக்கால் சட்டை அணிந்து, கையில் லத்தி ஏந்தி இருப்பார்கள். இந்தியாவின் 2-3 பில்லியனர்கள் கௌரவர்களுடன் உள்ளார்கள் என்று ராகுல் கூறினார்.
பாண்டவர்கள்-கௌரவர்கள் போர்
ராகுல் காந்தி காங்கிரஸை பாண்டவர்கள் என்று கூறினார். "பாண்டவர்கள் எப்போதாவது ஏழைகளுக்கு எதிராக செயல்பட்டார்களா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்களா? தவறான ஜிஎஸ்டியை அமல்படுத்தினார்களா? அவர்கள் எப்போதாவது இதுபோன்று செய்திருக்கிறார்களா? ஒருபோதும் இல்லை. ஏனென்றால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான ஜிஎஸ்டி கொள்கை, விவசாயச் சட்டங்கள் ஆகியவை இந்த நிலத்தின் தபஸ்விகளிடம் இருந்து திருடுவதற்கான ஒரு வழியாகும்" என்று அவர்கள் அறிந்திருந்தனர்.
பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி போன்ற முடிவுகளில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். பாண்டவர்கள் கௌரவர்களுக்கு எதிராகப் போரிட்டதைப் போன்றதுதான் இன்றைய போரும் உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய ராகுல், "மக்களுக்கு இது புரியவில்லை, ஆனால் இன்றும் சண்டை அப்படியே இருக்கிறது. ஒருபுறம் இந்த ஐந்து தபஸ்விகள் இருந்தனர், மறுபுறம் சங்க அமைப்பு உள்ளது. பாண்டவர்களுடன் அனைத்து மதத்தினரும் இருந்தனர். அதுபோல் இந்த யாத்திரையில் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்று யாரிடமும் கேட்பதில்லை. இந்த யாத்திரை அன்பின் கடை. பாண்டவர்களும் அநீதிக்கு எதிராக நின்றார்கள், அவர்களும் வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறந்தனர் ”என்று அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஹர் ஹர் மகாதேவ் என்று சொல்லவே இல்லை. ஏனென்றால் சிவபெருமான் தபசவி” ".
'ஜெய் சியா ராம்' சொல்லமாட்டார்கள்
மேலும் அவர் தன் யாத்திரையின் போது ஜெய் சியா ராம் என்ற வணக்கத்தை கேட்டதாக கூறினார். ஹரியானாவில், ‘ராம் ராம்’ என்று கேட்தாக கூறினார். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஜெய் சியா ராம் என்று சொல்வதில்லை. சீதையை வணக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். இது நமது வரலாற்றிற்கு எதிரானது. நான் உங்களிடம் (காங்கிரஸ் தொண்டர்கள்) சொல்கிறேன், நீங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை சந்திக்கும் போது, ஜெய் சியா ராம் என்று சொல்லச் சொல்லுங்கள். ஏனென்றால் சீதையும் ராமரைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று கூறினார்.
திங்கட்கிழமை நடைபெற்ற பாரத் ஜோடா யாத்திரை பெண்களுக்கு அர்பணிக்கப்படுவதாக கூறினார். பா.ஜ.க எப்போதும் செய்யாததை நாங்கள் செய்கிறோம். சிறு,குறு தொழிலாளர்கள், விவசாயிகள் பலம் பெறும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றார்.
முன்னதாக, ராகுல் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்களான ராகேஷ் திகாத் மற்றும் ஸ்வராஜ் அபியானின் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோரை சந்தித்தார். “விவசாயிகள் எங்களிடம் வந்து ஜிஎஸ்டி பற்றி பேசினார்கள். இமாச்சலில், ஆப்பிள் தொழில் முழுவதும் ஒரு தொழிலதிபரின் கைகளில் உள்ளது என்று கூறி வேதனை தெரிவித்தனர்.
மேலும், ராகுல் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் திறன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து பேசினார். “உங்கள் மொபைல் போன்களின் பின்புறத்தை பார்த்தால், ‘மேட் இன் சைனா’ என்று எழுதப்பட்டிருக்கும். போலீஸ்காரர்கள் அணியும் காலணிகளிலும் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. இந்த "மேட் இன் சைனா", "மேட் இன் சைனா" வார்த்தைகளால் நான் சோர்வடைந்து விட்டேன். பெய்ஜிங்கில் உள்ள ஒரு இளைஞர் ‘மேட் இன் குருக்ஷேத்ரா’ என்று எழுதப்பட்ட தொலைபேசியை பயன்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார். அம்பாலாவின் ஷம்பு பகுதி வழியாக இன்று (செவ்வாய்கிழமை ) மாலை யாத்திரை பஞ்சாபிற்குள் நுழைகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.