வருமான வரி தாக்கல் செய்யப்படும்போது, 26 ஏஎஸ், 16 ஏ, 16 ஆகிய விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொருந்தவில்லை என்றால், வருமான வரித்துறையிலிருந்து தாக்கல் செய்பவர்களுக்கு தன்னிச்சையாக அனுப்பப்படும் நோட்டீஸ் இனிமேல் அனுப்பப்படாது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இந்த வழக்கம் திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், வருமான வரி செலுத்துபவர்கள் சற்று ஆசுவாசமடையலாம்.
முன்னதாக, 26 ஏஎஸ், 16 ஏ, 16 ஆகிய விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொருந்தவில்லை என்றால், வருமான வரித்துறையானது தன்னிச்சையாக கணினிவழியில் நோட்டீஸ் அனுப்பும். அந்த நோட்டீசுக்கு இணையம் மூலமாகவே 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.
தற்போது அத்தகைய நோட்டீஸ் அனுப்பப்படாமல் இருக்கும் வகையில், வருமான வரிச்சட்டம் பிரிவு 143-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.