இந்தியாவில் நாளை (ஆகஸ்ட் 15) 77-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் அரசின் ஜன் பகிதாரி (மக்கள் பங்கேற்பு) இயக்கத்திற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,800 பேர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கொண்டாட்டங்களுக்காக 17,000 மின் அழைப்பு அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த விருந்தினர் பட்டியல் மிக அதிகமாக உள்ளது.
உழவர் உற்பத்தியாளர் அமைப்பு திட்டத்துடன் தொடர்புடைய 250 பேர், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இருந்து தலா 50 பங்கேற்பாளர்கள் மற்றும் பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, 50 ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், 50 செவிலியர்கள் மற்றும் பல மீனவர்களை அரசாங்கம் அழைத்துள்ளது.
இந்தியா- சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தரகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் உள்பட 660க்கும் மேற்பட்ட 'துடிப்பான கிராமங்களின்' 400 சர்பஞ்ச்கள்
எலைட் விருந்தாளர்கள் பட்டியலில் உள்ளனர்.
அதோடு மத்திய அரசின் விஸ்டா திட்டத்தில் நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்ட 50 'ஷ்ரம் யோகிகள்' (கட்டுமானத் தொழிலாளர்கள்) 50 காதி தொழிலாளர்கள், மற்றும் எல்லை சாலை கட்டுமானம், அமிர்த சரோவர் மற்றும் ஹர் கர் ஜல் யோஜனா ஆகியவற்றிலிருந்து தலா 50 தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், சில சிறப்பு விருந்தினர்கள் தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட்டை சந்திக்க உள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்தும் 75 ஜோடிகள் தங்கள் பாரம்பரிய உடையில் விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
நாளை பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil