72வது சுதந்திர தினம் புதன் கிழமை (15/08/2018 அன்று) கோலகலாமாக இந்தியா எங்கும் கொண்டாடப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும், நாட்டின் பல்வேறு மாநிலத் தலைநகரங்களிலும் பிரதமர், குடியரசுத் தலைவர், முதலமைச்சர்கள், மற்றும் ஆளுநர்கள் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம்.
இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் பாதுகாப்புப் படை வீரர்கள்.
சென்னையில் 72வது சுதந்திர தினம்
சென்னை கோட்டையில் சுதந்திர தினம் அன்று தமிழக முதல்வர்கள் கொடியேற்றுவது வழக்கம். இந்த விழாவிற்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை முழுவதும் சுமார் 15000 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கோட்டையைச் சுற்றிலும் மட்டும் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அந்த பணிக்காக சுமார் 2 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு படையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையம், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டிருக்கிறது.
72வது சுதந்திர தினம் - பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை விமான நிலையத்திற்கு ஏழடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அதே போல் சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களான தாம்பரம், எழும்பூர், சென்னை செண்ட்ரல் போன்ற இடங்களுக்கு ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் மூன்றடுக்கு பாதுகாப்பினை அளித்து வருகிறார்கள்.
நாளை நடைபெறும் விழாவை ஒட்டி காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் அமைந்திருக்கும் ஆர்பிஐ சுரங்கப்பாதை மற்றும் கொடிமரச்சாலை பாதைகளில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சிவப்பு வர்ண அனுமதி அட்டை வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே அச்சாலையில் பயணிக்க நாளை அனுமதி வழங்கப்படும்.